4
1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 2 அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்த பின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 4 அவர் மறுமொழியாக: மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். 5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உச்சியின்மேல் அவரை நிறுத்தி: 6 நீர் தேவனுடைய குமாரனேயானால் கீழே குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் தாங்கிக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். 7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். 8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: 9 நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்; 10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 11 அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள். 12 யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், 13 நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிலே வந்து தங்கியிருந்தார். 14 கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய யூதரல்லாதவருடைய கலிலேயாவிலே, 15 இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது என்று, 16 ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் நெருங்கியிருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். 18 இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், மீன் பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்ற சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலை போட்டு கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: 19 என் பின்னே வாருங்கள், உங்களை மனிதரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 20 உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 21 அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படகிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு, அவர்களையும் அழைத்தார். 22 உடனே அவர்கள் படகையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார். 24 அவருடைய புகழ் சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களை குணமாக்கினார். 25 கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான மககள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.