6
1 மனிதர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் நற்செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. 2 ஆகையால் நீ தர்மம் செய்யும்போது, மனிதரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக பெருமைபடாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 3 நீயோ நற்செயல் செய்யும்போது, உன் நற்செயல் மறைமுகமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. 4 அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளிதோற்றமாய்ப் பலனளிப்பார். 5 அன்றியும் நீ ஜெபம் செயும்போது வெளி வேஷக்காரரைப்போல் இருக்கவேண்டாம்; மனிதர் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 6 நீயோ ஜெபம் செய்யும்போது, உன் அறைவீட்டுக்குள் நுழைந்து, உன் கதவைப் பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை பார்த்து ஜெபம் செய் ; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளிப்படையாய் உனக்குப் பலனளிப்பார். 7 அன்றியும் நீங்கள் ஜெபம் செய்யும் போது, யூதரல்லாதவர்களைப்போல வீண்வார்த்தைகளை திரும்பதிரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். 8 அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை பார்த்து நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். 9 நீங்கள் ஜெபம் செய்ய வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக. 10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய விருப்பம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. 11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 12 எங்கள் எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். 13 எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. 14 மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் குற்றங்களையும் மன்னியாதிருப்பார். 16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர் பார்க்கும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 17 நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. 18 அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளித்தோற்றமாய்ப் பலனளிப்பார். 19 பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். 20 பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. 21 உங்கள் சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். 22 கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். 23 உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! 24 இரண்டு எஜமான்களுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது. 25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் வாழ்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைப் பார்க்கிலும் வாழ்கையும், உடையைப் பார்க்கிலும் உடலும் விசேஷித்தவைகள் அல்லவா? 26 வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் உடல் அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? 28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; 29 என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். 30 குறைந்த விசுவாசமுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். 32 இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும். 34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.