14
1 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழை கேள்விப்பட்டு, 2 தன் வேலைக்காரரை பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 3 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறையில் வைத்திருந்தான். 4 ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்ல என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். 5 ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். 6 அப்படியிருக்க, ஏரோதின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம் செய்து ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். 7 அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். 8 அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். 9 ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு, 10 ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானைனின் தலையை வெட்டு வித்தான். 11 அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். 12 அவனுடைய சீடர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம் செய்து , பின்பு போய் அந்தச் செய்தியை இயேசுவுக்கு அறிவித்தார்கள். 13 இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படகில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். 14 இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களை சுகமாக்கினார். 15 மாலை நேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 16 இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்றார். 17 அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். 18 அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 19 அப்பொழுது, அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். 20 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பங்களைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். 21 பெண்களும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். 22 இயேசு மக்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அடுத்த கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். 23 அவர் மக்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம் செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலை நேரமானபோது அங்கே தனிமையாயிருந்தார். 24 அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது. 25 இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். 26 அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். 27 உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். 28 பேதுரு அவரை பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின் மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். 29 அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக தண்ணீரின் மேல் நடந்தான். 30 காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கி போகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். 31 உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாச குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். 32 அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. 33 அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். 34 பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். 35 அவ்விடத்து மனிதர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர் எல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36 அவருடைய ஆடையின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் குணமானார்கள்.