அத்தியாயம்–2
பக்கவாதக்காரனை சுகப்படுத்துதல்
1 சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு; 2 உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள், வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல் போனது; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். 3 அப்பொழுது நான்கு பேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்; 4 மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள். 5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 6 அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: 7 இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். 8 அவர்கள் தங்கள் மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன? 9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்லுவதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்லுவதோ, எது எளிது? 10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: 11 நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 12 உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப் போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். 13 அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப் பண்ணினார்.
மத்தேயு ஊழியத்திற்கு அழைக்கப்படுதல்
14 அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரி வசூலிக்கும் இடத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேபோனான்.
பரிசேயர்களை கடிந்துக்கொள்ளுதல்
15 அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது, அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள். 16 இயேசு ஆயக்காரரோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் பார்த்து, அவருடைய சீடரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுவது என்ன என்று கேட்டார்கள். 17 இயேசு அதைக் கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை, சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை; நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனம் திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். 18 யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் உபவாசம் பண்ணிவந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து: யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் உபவாசம் பண்ணுகிறார்களே, ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம் பண்ணாமல் இருப்பது ஏன் என்று கேட்டார்கள். 19 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும் போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம் பண்ணுவார்களா? மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம் பண்ணமாட்டார்களே. 20 மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள். 21 ஒருவனும் புதிய ஆடையை பழைய ஆடையோடு இணைத்து தைக்கமாட்டான், தைத்தால், அதோடு இணைத்த புதிய ஆடை பழைய ஆடையை அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். 22 ஒருவனும் புது திராட்சை ரசத்தைப் பழைய தோல்பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால், புதுரசம் தோல்பைகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், தோல்பைகளும் கெட்டுப்போகும்; புதுரசத்தைப் புது தோல்பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார்.
ஓய்வுநாளில் கதிர்களைச் சாப்பிடுதல்
23 பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைப் சாப்பிட தொடங்கினார்கள். 24 பரிசேயர் அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். 25 அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது, 26 அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் படித்தது இல்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர் தவிர வேறு யாரும் சாப்பிடக்கூடாத தேவ சமுகத்தின் அப்பங்களைத் தானும் சாப்பிட்டுத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். 27 பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது; 28 எனவே மனிதகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.