அத்தியாயம்–6
1 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள். 2 ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக்கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? 3 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள். 4 இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார். 5 அங்கே அவர் சில நோயாளிகள்மேல் மட்டும் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல், 6 அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.
சீடர்களுக்கு அறிவுரை
7 இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து, 8 வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்; 9 காலனிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார். 10 பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள். 11 யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நடப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நடப்பது இலகுவாயிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 12 அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; 13 அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள். 14 இயேசுவினுடைய பெயர் பிரபலமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: இறந்துபோன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான். 15 சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
16 ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான். 17 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது, 18 யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். 19 ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது. 20 ஏனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான். 21 ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதருக்கும் ஒரு விருந்து பண்ணினபோது, 22 ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடு பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி; 23 நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான். 24 அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். 25 உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். 26 அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடு பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
யோவான் ஸ்நானகனின் தலை வெட்டப்படுதல்
27 உடனே யோவான் ஸ்நானகனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான். 28 அப்படியே அவன் போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். 29 அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள். 30 அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள். 31 அவர் அவர்களைப் பார்த்து: வனாந்தரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது. 32 அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்.
ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்
33 அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள். 34 இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார். 35 நீண்டநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்தரமான இடம், நீண்டநேரமும் ஆயிற்று; 36 சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 37 அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள். 38 அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள். 39 அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். 40 அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். 41 அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார். 42 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள். 43 மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 44 அப்பம் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராய் இருந்தார்கள். 45 அவர் மக்களை அனுப்பிவிடும் போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார். 46 அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். 47 மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
கிறிஸ்து கடலின் மேல் நடத்தல்
48 அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார். 49 அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள். 50 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி. 51 அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். 52 அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள்.
அநேகரை சுகப்படுத்துதல்
53 அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள். 54 அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து, 55 அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்; 56 இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.