அத்தியாயம்–13
தேவாலையம் அழிக்கப்படும் என்று முன்னறிவித்தல்
1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். 2 இயேசு அவனுக்கு மறுமொழியாக: இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். 3 பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து: 4 இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். 5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள். 6 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள். 7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது. 8 மக்களுக்கு எதிராக மக்களும், ராஜ்யத்துக்கு எதிராக ராஜ்யமும் எழும்பும்; பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும், கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்கள்
9 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; எனக்காக தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள். 10 எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும். 11 அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்தநேரத்திலே உங்களுக்குச் சொல்லப்படுகிறதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியே பேசுகிறவர். 12 அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலை செய்வார்கள். 13 என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். கடைசி வரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான். 14 மேலும் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும்; அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும். 15 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாவது எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கவேண்டும். 16 வயலில் வேலை செய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும். 17 அந்தநாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! 18 இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள். 19 ஏனெனில் தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும். 20 கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார். 21 அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால், நம்பவேண்டாம். 22 ஏனென்றால் கள்ளக்கிறிஸ்துக்களும் பொய்த்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 23 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 24 அந்தநாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது; 25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும். 26 அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள். 27 அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து, வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார். 28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் வந்துவிட்டது என்று அறிவீர்கள். 29 அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். 30 இவைகளெல்லாம் நடக்கும்முன்பு இந்த வம்சம் ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எச்சரிப்புடன் விழித்திருங்கள்
31 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. 32 அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர் தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது. 33 அந்தகாலத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாததினால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். 34 ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு, தூரதேசத்திற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும்போது, தன் வேலைக்காரருக்கு பொறுப்பைக் கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும் நியமித்து, விழித்திருக்கும்படி காவல்காக்கிறவனுக்குச் சொல்லுவான். 35 அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனென்றால், வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது. 36 நீங்கள் நினைக்காத நேரத்தில் அவன் வந்து, நீங்கள் தூங்குகிறதைக் கண்டுபிடிக்காதபடி விழித்திருங்கள். 37 நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.