அத்தியாயம்–14
பரிசேயன் வீட்டில் இயேசு
1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் உணவு உட்கொள்ளும்படிக்குச் சென்றிருந்தார். 2 அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். 3 இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். 4 அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு, 5 அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார். 6 அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று. 7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: 8 ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். 9 அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். 10 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில் போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும். 11 தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 12 அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் உறவினர்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். 13 நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும் முடவர்களையும் குருடரையும் அழைப்பாயாக. 14 அப்பொழுது நீ பேர்பெற்றவனாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் திரும்பச்செய்ய அவர்களிடத்தில் ஒன்றுமில்லை; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.
விருந்துசாலை பற்றிய உவமை
15 அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பேர்பெற்றவன் என்றான். 16 அதற்கு அவர்: ஒரு மனிதன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். 17 விருந்து வேளையில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான். 18 அவர்களெல்லோரும் சாக்குப்போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலை வாங்கியிருக்கிறேன், நான் கட்டாயமாய்ப்போய் அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 19 வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 20 வேறொருவன்: எனக்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதினால் நான் வரக்கூடாது என்றான். 21 அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும் முடவர்களையும் குருடரையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான். 22 வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். 23 அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா; 24 அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
சீடர்களாக இருப்பது
25 பின்பு அநேக மக்கள் அவரோடேகூடப் பயணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து: 26 யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாயிருக்கமாட்டான். 27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீடனாயிருக்கமாட்டான். 28 உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாயிருந்து, 29 அஸ்திபாரம் போட்டபின்பு வேலையை முடிக்க முடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: 30 இந்த மனிதன் கட்டத்தொடங்கி, முடிக்க முடியாமற்ப்போனான் என்று சொல்லி தன்னை ஏளனமாய் பேசாதபடிக்கு, அதைக் கட்டிமுடிப்பதற்கு தனக்கு வேண்டிய ஆற்றலுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செலவாகும் தொகையை கணக்குப்பாராமலிருப்பானோ? 31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரரோடே வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே அமர்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ? 32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, தூதுவரை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. 33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீடனாயிருக்கமாட்டான். 34 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? 35 அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.