16
1 அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீடன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதப்பெண், அவன் தகப்பன் கிரேக்கன். 2 அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சிப் பெற்றவனாயிருந்தான். 3 அவனைப் பவுல் தன்னோடுகூட கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அங்கிருந்த யூதர்களெல்லோருக்கும் தெரிந்திருந்தபடியால், அவர்களின் பொருட்டு அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான். 4 அவர்கள் பட்டணங்களுக்குப் போகும்போது, எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொண்டு நடக்கும்படி அவர்களுக்குச் சொன்னார்கள். 5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. 6 அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துச்சென்ற போது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்ல வேண்டாமென்று பரிசுத்த ஆவியினாலே தடைசெய்யப்பட்டு, 7 மீசியா தேசம்வரை வந்து, பித்தினியா நாட்டுக்குப் போக விரும்பினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவிடவில்லை. 8 அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள். 9 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டானது; அதென்னவென்றால், மக்கெதோனியா தேசத்தைச் சேர்ந்த ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யவேண்டுமென்று பவுலை வேண்டிக்கொண்டதாக இருந்தது. 10 அந்த தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்கு நற்செய்தியைத் தெரிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தார் என்று நாங்கள் உறுதிப்படுத்திக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப், 11 துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் சென்று, 12 அங்கிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ரோமர் குடியேறின பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாட்கள் தங்கியிருந்தோம். 13 ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய் ஆற்றின் அருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த பெண்களுக்குப் போதித்தோம். 14 அப்பொழுது தியத்தீரா ஊரைச்சேர்ந்த விலையுயர்ந்த சிவப்பு கம்பளம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொன்னவைகளைக் கவனிப்பதற்காக கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தார். 15 அவளும் அவள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களைப் பார்த்து: நீங்கள், நான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று நினைத்தால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள். 16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகும்போது குறி சொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள். 17 அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனிதர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், மீட்பின் வழியை நமக்கு தெரிவிக்கிறவர்கள் என்று சத்தமாய் சொன்னாள். 18 அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: ஆவியே, நீ இவளை விட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளை கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியே போனது. 19 அவளுடைய எஜமான்கள் தங்கள் வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள். 20 அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி, 21 ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர். 22 அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு எதிராக வந்து. அதிகாரிகள் அவர்கள் ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; 23 அவர்களை அதிகமாய் அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளை கொடுத்தார்கள். 24 அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உட்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான். 25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 26 திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது. 27 சிறைச்சாலைக்காரன் தூக்கம்தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலைசெய்து கொள்ளப்போனான். 28 அப்பொழுது, பவுல் சத்தமிட்டு: நீ உனக்கு நீயே எந்தத்தீங்கையும் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம் என்றான். 29 அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிப்போய், நடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, 30 அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். 31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, 32 அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். 33 மேலும் அந்த இராத்திரிவேளையிலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடு இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். 34 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாயிருந்தான். 35 பொழுது விடிந்தபின்பு: அந்த மனிதர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் காவலர்களை அனுப்பினார்கள். 36 சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலை செய்யும்படி அதிகாரிகள் கட்டளை கொடுத்து அனுப்பியுள்ளார்கள்; எனவே நீங்கள் இப்பொழுது புறப்பட்டு சமாதானத்தோடு போங்கள் என்றான். 37 அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரிக்காமல், வெளிப்படையாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலை செய்கிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை விடுதலை செய்து வெளியே அனுப்பிவிடட்டும் என்றான். 38 காவலர்கள் இந்த வார்த்தைகளை சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் ரோமர்கள் என்று அதிகாரிகள் கேட்டபொழுது பயந்துவந்து, 39 அவர்களோடு தயவாய் கெஞ்சிப்பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள். 40 அப்படியே அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளின் வீட்டிற்குப்போய், சகோதரர்களைப் பார்த்து , அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார்கள்.