20
1 கலகம் முடிந்தபின்பு, பவுல் சீடரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, உற்சாகப்படுத்தி, மக்கெதோனியாவுக்கு புறப்பட்டுப் போனான் 2 அவன் அந்த பகுதிகளுக்குச் சென்று சீடர்களுக்கு புத்தி சொல்லி,உற்சாகப்படுத்தி கிரேக்கு தேசத்திற்கு சென்றான் 3 அங்கே அவன் மூன்று மாதம் வசித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக நினைத்தபோது, யூதர்கள் அவனைக் கொலை செய்யும்படி இரகசியமாய் யோசனை செய்துகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். 4 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டைச்சேர்ந்த தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் துணைக்கு வந்தார்கள். 5 இவர்கள் எங்களுக்கு முன்னால் சென்று, துரோவா பட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். 6 புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறி ஐந்துநாட்கள் பயணத்திற்குப் பின்பு பிலிப்பி பட்டணத்திற்கு வந்து அங்கிருந்து துரோவா பட்டணத்துக்குச் சென்று, அங்கே அவர்களிடம் ஏழுநாட்கள் தங்கியிருந்தோம். 7 வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும் பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான். 8 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டில் அநேக விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது. 9 அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து, பவுலின் போதனைகளை நீண்ட நேரம் கேட்டு, தூக்க மயக்கத்தினால், மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தான். 10 உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். 11 பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். 12 அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள். 13 பவுல் ஆசோ பட்டணம் வரைக்கும் தரை வழியாய்ப் போகத் திட்டமிட்டிருந்தான் , அவன் திட்டமிட்டபடியே சென்றான், நாங்கள் கப்பல் ஏறி, துரோவா பட்டணத்திற்கு கடல் வழியாகச் சென்றோம் . 14 அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைப் பார்த்தபொழுது நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டு மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம். 15 அடுத்தநாளில் கீயு தீவுக்கு எதிரே உள்ள பகுதிக்கு வந்து, 16 பவுல் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமில் தங்கவேண்டுமென்று விரும்பியதால், தான் ஆசியாவிலே காலத்தை வீணாக்காமல் , எபேசு பட்டணத்தில் இருந்து கடந்து போக வேண்டுமென்று தீர்மானித்து, மறுநாளிலே சாமு தீவை அடைந்து , துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்துக்கு வந்தோம். 17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, ஆலயத்தின் மூப்பரை வரவழைத்தான். 18 அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் இருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 19 நான் மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு வந்த சோதனைகளோடும் கர்த்தருக்குப் பணி செய்தேன். 20 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி, 21 தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன். 22 இப்பொழுதும் நான் பரிசுத்த ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது . 23 தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதை மட்டும் அறிந்திருக்கிறேன். 24 ஆகிலும் எதைக்குறித்தும் நான் கவலைப்படமாட்டேன். என் உயிரையும் பெரிதாக நினைக்கமாட்டேன். 25 இதோ, நான் உங்களோடு வசித்து, தேவனுடைய ராஜ்ஜியத்தைக் குறித்து பிரசங்கம் பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன். 26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியால், 27 எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்று சாட்சிகளாக வைக்கிறேன். 28 ஆகையால், உங்களைக் குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது ஆலயத்தை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். 29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். 31 எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்தி சொன்னதை நினைத்து விழித்திருங்கள். 32 இப்பொழுதும் சகோதரரே, உங்கள் பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். 33 ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை. 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது. 35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். 36 இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால் படியிட்டு, ஆலய மூப்பரிடம் சேர்ந்து ஜெபம் பண்ணினான். 37 அவர்கள் எல்லோரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தையினால் அதிகமாய்த் துக்கப்பட்டு, 38 பவுலைக் கட்டித்தழுவி, அவனை முத்தம் செய்து, கப்பல் வரைக்கும் அவனோடு சென்றார்கள்.