22
1 சகோதரரே, பெரியோர்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிற நியாயங்களை கவனித்து கேளுங்கள் என்றான். 2 அவன் எபிரெய மொழியிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்: 3 நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேத பிரமாணத்தின்படியே திட்டமாய் போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லாரும் தேவனைக் குறித்து வைராக்கியம் உள்ளவர்களாயிருக்கிறது போல நானும் வைராக்கியம் உள்ளவனாயிருந்தேன். 4 நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும் வரை துன்பப்படுத்தினேன். 5 அதற்கு பிரதான ஆசாரியரும் மூப்பர்யாவரும் சாட்சி கொடுப்பார்கள்; அவர்கள் கையினாலே நான் சகோதரருக்கு கடிதங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவில் இருக்கிறவர்களை தண்டிப்பதற்கு, அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டு வருவதற்காக அங்குபோனேன். 6 அப்படி நான் புறப்பட்டு போகும் வழியில் தமஸ்குவுக்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. 7 நான் தரையிலே விழுந்தேன். அந்நேரம்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 8 அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். 9 அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. 10 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ;அங்கே நீ செய்யவேண்டிய ஆயத்தங்கள் எல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார். 11 அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன். 12 அப்பொழுது வேதபிரமாணத்தின் படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதராலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன், 13 என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, உனக்குப்பார்வை கிடைப்பதாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனை உற்றுப்பார்த்தேன். 14 அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்து கொள்ளவும்,நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். 15 நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் எல்லா மனிதருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். 16 இப்பொழுது நீ தயங்குவதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் பணிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான். 17 பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் செய்துகொண்டிருக்கையில், நான் ஆவிக்குள்ளாக்கி, அவரைப் பார்த்தேன். 18 அவர் என்னைப்பார்த்து: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆகவே நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார். 19 அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும், 20 உம்முடைய சாட்சியாய் வாழ்ந்த ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் உடைகளை பாதுகாத்துக் கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன். 21 அதற்கு அவர்: நீ போ, நான் உன்னை தொலைவில் உள்ள யூதர்கள் அல்லாதவர்களிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான். 22 இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள். 23 இவ்விதமாய் அவர்கள் கோஷமிட்டு தங்கள் மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூவிக்கொண்டிருக்கையில், 24 சேனாதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி ஆணையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படி கோஷமிடுகிற காரணத்தை தெரிந்துகொள்ளும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான். 25 அதன்படி அவர்கள் அவனை கயிற்றால் இருக கட்டும்போது, பவுல் அருகில்நின்ற நூற்றுக்கு அதிபதியை பார்த்து: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான். 26 நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாதிபதியிடத்தில் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனிதன் ரோமன் என்றான். 27 இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான். 28 சேனாதிபதி அவனைப்பார்த்து : நான் அதிக பணம் கொடுத்து இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்த சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான். 29 அவனை அடித்து விசாரிக்கும்படி ஆயத்தமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். தளபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டினதற்காகப் பயந்தான். 30 பவுலின் மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் அடுத்தநாளிலே அவனை விடுவித்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி ஆணையிட்டு, அவனை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.