3
1 மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2 எப்படியெனில், மனிதர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தை உள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றி இல்லாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3 மெய்யானஅன்பு இல்லாதவர்களாயும், அனுசரித்து போகாதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சை அடக்கம் இல்லாதவர்களாயும், கொடுமை செய்கிறவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4 துரோகிகளாயும், துணிகரம் உள்ளவர்களாயும், இறுமாப்பு உள்ளவர்களாயும், தேவனுக்கு பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5 தேவ பக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு, 7 எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாய் இருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள். 8 யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் தீயகுனமுள்ள மனிதர்கள், விசுவாச காரியத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். 9 ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அந்த இருவருடைய அறிவீனம் எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய அறிவீனமும் வெளிப்படும். 10 நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும், 11 அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவை எல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார். 12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க விருப்பமாய் இருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். 13 பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம் போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களுமாகவும் இருந்து மேன்மேலும் கேடு உள்ளவர்களாவார்கள். 14 நீ கற்று உறுதிசெய்துக் கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்து இருக்கிறதுமல்லாமல், 15 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். 16 வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்ப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நற்செயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, 17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனம் உள்ளவைகளாயிருக்கிறது.