4
1 அவர்கள் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, 2 அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபம் அடைந்து 3 அவர்களைப் பிடித்து, மாலை நேரமாய் இருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். 4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. 5 மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபண்டிதரும், 6 பிரதானஆசாரியானாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூடி வந்து, 7 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த அதிகாரத்தினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். 8 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, 9 வியாதியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், 10 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சுகமாக்கப்பட்டவனாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் மக்களெல்லோருக்கும் தெரிந்திருக்கக்கடவது. 11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் சாதாரணமாய் நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்க்கல்லானவர். 12 அவராலேயன்றி வேறொருவராலும் மீட்பு இல்லை; நாம் மீட்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். 13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள். 14 சுகமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமல் போயிற்று. 15 அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: 16 இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. 17 ஆகிலும் இது அதிகமாய் மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய் எச்சரிக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டு, 18 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதுவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். 19 பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுடைய வார்த்தையை கேட்பதைப்பார்க்கிலும் உங்களுடைய வார்த்தைகளைக் கேட்பது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். 20 நாங்கள் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். 21 நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். 22 அற்புதமாய்ச் சுகமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான். 23 அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். 24 அவர்கள் அதைக் கேட்டு, ஒன்று சேர்ந்து தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். 25 யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும், 26 கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் தேவன் நீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 27 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, 28 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யுதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டம் கூடினார்கள். 29 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவன் நீர் கவனித்து, 30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும் என்றார்கள். 31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாய்ச் சொன்னார்கள். 32 விசுவாச கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாய் இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. 33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாய் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. 34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து, 35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. 36 சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், 37 தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.