26
1 அகிரிப்பா பவுலைப் பார்த்து: நீ உனக்காகப் பேச உன்னை அனுமதிக்கிறேன் என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக பதில் சொல்லத் தொடங்கினான். 2 அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லா காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். 3 விசேஷமாய் நீர் யூதருடைய எல்லாமுறைமைகளையும் விவாதங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். 4 நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திருக்கிறார்கள். 5 நம்முடைய மார்க்கத்திலுள்ள மதவேறுபாடுகளில் மிகவும் கண்டிப்பான நேரத்துக்கு ஏற்றபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லலாம். 6 தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாய் நிற்கிறேன். 7 இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள். 8 தேவன் மரித்தவர்களை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைக்கிறதென்ன? 9 முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களை செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். 10 அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அனுமதிபெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். 11 எல்லா ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை பலமுறை கண்டித்து தேவதூஷணம் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் கோபவெறிகொண்டவனாய் அந்நியப்பட்டணங்களவரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். 12 இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, 13 மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். 14 நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 15 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. 16 இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்கு காட்சிகொடுத்து காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன். 17 உன் சொந்தமக்களிடத்தினின்றும் அந்நிய மக்களிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, 18 அவர்கள் என்னைப் பற்றும் நம்பிக்கையினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப் பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். 19 ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை. 20 முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா நாடெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு யூதரல்லாதோரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனம்மாறி குணப்படவும், மனமாறியதற்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். 21 இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சி செய்தார்கள். 22 ஆனாலும் தேவ கருணை பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி சொல்லி வருகிறேன். 23 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சொந்த மக்களுக்கும் அந்நிய மக்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். 24 இவ்விதமாய் அவன் தனக்காக பதில்சொல்லுகையில், பெஸ்து மிகவும் சத்தமாய்: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். 25 அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன். 26 இந்தச் செய்திகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று நினைக்கிறேன்; இது ஒரு பக்கம் நடந்த காரியமல்ல. 27 அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா? நம்புகிறீர் என்று அறிவேன் என்றான். 28 அப்பொழுது அகிரிப்பா பவுலைப் பார்த்து: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்க செய்கிறாய் என்றான். 29 அதற்குப் பவுல்: நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற அனைவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்த பாடுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 30 இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து, 31 தனியே போய்: இந்த மனிதன் மரணத்துக்காவது பாடுகளுக்கு உரியதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 32 அகிரிப்பா பெஸ்துவை பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாது இருந்திருந்தால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான்.