27
1 நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து படையைச் சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூறுப் பேருக்கு தலைவனிடத்தில் ஒப்புவித்தார்கள். 2 அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டு வழியைபிடித்துப் போகவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனே கூட இருந்தான். 3 மறுநாள் சீதோன் துறைமுகம் வந்துச் சேர்ந்தோம். யூலியு பவுலை அன்பாய் நடப்பித்து, அவன் தன் நண்பர்களிடத்திலே போய் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான். 4 அவ்விடம் விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்க் காற்றாயிருந்தபடியினால், சீப்புரு தீவின் .ஓரமாய்ப் பயணம் செய்தோம் 5 பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் பயணித்து , லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம். 6 இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை, நூறுப் பேருக்கு தலைவன் அங்கே , எங்களைப் பார்த்து அதில் ஏற்றினான். 7 காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீது பட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஓரமாய்ப் பயணம் செய்தோம் . 8 அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்கு அருகாமையிலிருந்தது. 9 வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாய் இருக்குமென்று , பவுல் அவர்களை நோக்கி: 10 மனிதர்களே, இந்த பயணத்தினாலே பொருட்களுக்கும், கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய உயிருக்கும் வருத்தமும்,மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான். 11 நூறுப் பேருக்கு தலைவன் பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் சொந்தக்காரரையும் அதிகமாய் நம்பினான். 12 அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தா தீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள். 13 தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் வேண்டிக் கொண்டது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் புறப்பட்டு கிரேத்தா தீவுக்கு அருகில் சென்றார்கள் . 14 கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங்கடுங்காற்று அதில் மோதிற்று. 15 கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம். 16 அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் அருகில் போகையில் வெகுநேரம் போராடி படகை கைப்பற்றினோம் . 17 அதை அவர்கள் தூக்கியெடுத்த பின்பு, பல உதவிகள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி,புதை மணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள். 18 மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அவதிபட்டபடியினால் மறுநாளில் சில பொருட்களை கடலில் போட்டு விட்டார்கள் . 19 மூன்றாம் நாளிலே கப்பலின் ஆயுதங்களை எங்கள் கைகளினாலே எடுத்து கடலில் வீசினோம் 20 அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் இல்லாமல் போயிற்று . 21 அநேகநாள் அவர்கள் சாப்பிடாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனிதர்களே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. 22 ஆகிலும் மனதில் உறுதியுள்ளவர்களாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற் சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பயணச் சேதம் வராது. 23 ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் வணங்குகிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இரவிலே என்னிடத்தில் வந்து நின்று: 24 பவுலே, பயப்படாதே, நீ ரோம பேரரசருக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட பயணம் பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவுபண்ணினார் என்றான். 25 ஆகையால் மனிதர்களே,மனதில் உறுதியுள்ளவர்காளாயிருங்கள் . எனக்குச் சொல்லப்பட்ட படியே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். 26 ஆயினும் நாம் ஒரு தீவிலே ஆபத்தை சந்திக்க வேண்டியதாயிருக்கும் என்றான். 27 பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைக் கழிக்கப்பட்டுப் போகையில், நடு இராத்திரியிலே கப்பலாட்களுக்கு ஒரு கரை நெருங்கி வருகிறதாகத் தோன்றிற்று. 28 உடனே அவர்கள் நங்கூரம் விட்டுப் பார்த்த போது இருபது அடி ஆழம் என்று கண்டார்கள் ;சிறிதுதூரம் போனபொழுது, மறுபடியும் நங்கூரம் விட்டுப் பார்த்தப் போது பதினைந்து அடி ஆழம் என்று கண்டார்கள். 29 பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின் பகுதியிலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள். 30 அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன் பகுதியிலிருந்து நங்கூரங்களைப் போட போகிறதுப் போல படகை கடலில் இறக்குகையில், 31 பவுல் நூறுப் பேருக்கு தலைவனையும் பணியாட்களையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான். 32 அப்பொழுது, போர் வீர பணியாட்கள் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள். 33 பொழுது விடிகையில் எல்லாரும் சாப்பிடும் படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள். 34 ஆகையால் சாப்பிடும் படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு முடியும் விழாது என்றான். 35 இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுப் சாப்பிடத் தொடங்கினான். 36 அப்பொழுது எல்லாரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள் . 37 கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தோம். 38 திருப்தியாகப் சாப்பிட்டப் பின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே போட்டு, கப்பலை லேசாக்கினார்கள் . 39 பொழுது விடிந்தபின்பு, எந்த இடம் என்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகத்தை அவர்கள் பார்த்து ; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து, 40 நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாய் விரித்து, கரைக்கு நேராய்ப் போய் , 41 இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலை நிறுத்தினார்கள் ; முன்பகுதி ஊன்றி அசையாமலிருந்தது, பின் பாகங்கள் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று. 42 அப்பொழுது காவல் பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர் வீர பணியாட்கள் யோசனையாயிருந்தார்கள். 43 நூறுப் பேருக்குத் தலைவன் பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும், 44 மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பலின் உடைந்த துண்டுகள்மேல் உட்கார்ந்து கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.