அத்தியாயம்-4
உற்சாகப்படுத்துதல்
1 ஆகவே, எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரர்களே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இப்படியே கர்த்தருக்குள் நிலைத்து நில்லுங்கள். 2 கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன். 3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாக இருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடும் நற்செய்தியை அறிவிப்பதில் என்னோடு மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பெயர்கள் ஜீவபுத்தகத்தில் இருக்கிறது. 4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன். 5 உங்கள் சாந்தகுணம் எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் அருகாமையில் இருக்கிறார். 6 நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு, ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். 8 கடைசியாக, சகோதரர்களே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்பெயர் உள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். 9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவைகளும், பெற்றுக்கொண்டவைகளும், கேட்டவைகளும், பார்த்தவைகளும் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார்.
உதவிகளுக்காக நன்றிகூருதல்
10 என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மீண்டும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; முன்னமே இப்படிச் செய்ய நினைத்தீர்கள், ஆனால் உதவி செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 11 என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால் நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். 12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன். 13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு. 14 ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு உடன்பட்டது நலமாக இருக்கிறது. 15 மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும். 16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள். 17 உங்கள் உதவிகளை நான் தேடாமல், உங்கள் உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன். 18 எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். 19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். 20 நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
இறுதி வாழ்த்துதல்
21 கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் எல்லோருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடு இருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 22 பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரண்மனையில் உள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 23 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.