அத்தியாயம்–3
பவுல் தம் அன்பை வெளிப்படுத்துதல்
1 ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்க முடியாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்து விடப்படுகிறது நன்மையென்று நினைத்து, 2 இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். 3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. 4 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்த போது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள். 5 ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்க முடியாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தினது உண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன். 6 இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும் குறித்து, நீங்கள் எப்பொழுதும் எங்களைப் அன்பாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறது போல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாய் இருக்கிறீர்களென்பதைக் குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே, 7 சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா நெருகத்திலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக் குறித்து ஆறுதலடைந்தோம். 8 நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம். 9 மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக் குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் நன்றி செலுத்துவோம்?
ஜெபத்தில் தாங்குதல்
10 உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும் பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே. 11 நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக. 12 நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனிதரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, 13 இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை பலப்படுத்துவாராக.