அத்தியாயம்- 3
பவுல் அவர்களை ஜெபிக்க வேண்டுதல்
1 கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும், 2 துன்மார்க்கமான பொல்லாத மனிதர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே. 3 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 4 மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம். 5 கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. 6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 7 இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், 8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். 9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம். 10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. 11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் வேலைகளைச் செய்து, ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். 12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்த உணவை சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். 13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள். 14 மேலும், இந்த கடிதத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக்கவனத்தில் கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே உறவு வைத்துக்கொள்ளாதிருங்கள். 15 ஆனாலும் அவனைச் சத்துருவாக நினைக்காமல் , சகோதரனாக நினைத்து , அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
இறுதி வாழ்த்துதல்
16 சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் எல்லா விதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடும்கூட இருப்பாராக. 17 பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், என் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன். 18 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும்கூட இருப்பதாக. ஆமென்.