- நீதியுள்ளவரும் நீதிமானாக்குகிறவரும்
பாவி நீதிமானாக்கப்படுதலையும், தேவன் ஓருவரே எந்த மனிதனையும் நீதிமானாக்கக்கூடியவர் என்ற பெரிய சத்தியத்தையும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். நாம் இப்போது மேலும் ஒருபடி சென்று, நீதிபரான தேவன் குற்றமிழைத்தோரை எவ்வாறு நீதிமானாக்கவியலும் என்று கேட்டுப்பார்க்கலாம். இதற்கேற்ற நிறைவான பதிலை நாம் பவுலின் வாயிலாக ரோமர் 3:21-26 ல் காணலாம்.
‘இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது, அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள், தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்”
இங்கு என் அனுபவத்திலிருந்து சிறிது கூற விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் என் பாவத்தை எனக்கு உணர்த்தியபோது, தேவனின் நியாயத்தீர்ப்பைப் பற்றிய தெளிவான உணர்ச்சி எனக்கு அந்த வினாடியே ஏற்பட்டது. பாவம் மற்றவர்களுக்கெப்படியோ, எனக்கு அது பொறுக்கவொண்ணாச் சுமையாயிருந்தது. நரகத்தைக் குறித்த அச்சத்தைவிடப் பாவத்தைப்பற்றிய பயமே எனக்கு மிகுந்திருந்தது. பாவத்தினிமித்தம் என்னைத் தேவன் தண்டியாதிருந்தாராயின், அவர் என்னைத் தண்டிக்கவே வேண்டுமென்று நான் எண்ணுமளவுக்கு என் பாவம் எனக்கு மிகப் பெரியதாய் தோன்றியது. பூலோகத்துக்கே நீதிபதியானவர் என்னுடையதைப் போன்ற பாவத்துக்கு நிச்சயமாய் ஆக்கினை தரவேண்டுமென்று நான் கருதினேன். நியாயாசனத்தில் அமர்ந்த நான் எனக்கு நானே அழிவின் தண்டனையை விதித்துக் கொண்டேன். ஏனெனில் நான் தேவனுடைய நிலையில் இருந்திருப்பின், என்னைப்போன்றதொரு குற்றவாளியை மிகக் கீழான நரகத்;துக்கே அனுப்பியிருப்பேன் என்ற அபிப்பிராயம் எனக்குண்டாயிற்று. முழு நேரமும், தேவனுடைய நாமத்துக்கு இழுக்கு ஏற்படக்கூடாதென்று ஆழ்ந்த கவலையும், அவரது சன்மார்க்க அரசியலைப்பற்றிய நேர்மையும் என் சிந்தையில் கவிந்திருந்தன. அநீதியான முறையில் நான் மன்னிக்கப்பட்டால், அது என் மனச்சாட்சிக்குத் திருப்பதியளிக்காதென்று எனக்குப்பட்டது. நான் புரிந்த பாவத்துக்குத் தண்டனை விதிக்கப்படவேண்டும். தேவன் நீதிபரராயின் என்னைப்போன்ற பாவியை எவ்வாறு நீதிமானாக்குவாரெனும் வினாவும் என்னில் எழுந்தது. ‘நீதியுள்ளவரான அவர் எவ்விதம் நீதிமானாக்குகிறவராயிருப்பார்?” என்று நான் என்னையே கேட்டுக்கொண்டேன். இவ்வினா என்னைப் பெரிதும் பாதித்தது: அதற்குரிய விடை ஏதும் எனக்குப் புலப்படவில்லை. என் மனச்சான்றுக்குத் திருப்திதரக்கூடியவகையில் ஒரு பதிலை என்னால் நிச்சயமாகக் கண்டுபிடித்திருக்க முடியாது.
பரிசுத்த வேதாகமம் தெய்வீக ஏவுதலால் தோன்றியதென்பதற்கு, ஒப்புரவாகுதல் எனும் கொள்கை ஐயத்திற்கிடமற்ற ஆதாரமாயுள்ளதென்பது என் கருத்து. நீதியின் வேந்தர் அநீதியுள்ள கலகக்காரனுக்காக மரிப்பாரென்று யார்தான் நினைப்பார்கள். யார் அவ்விதம் செய்வார்கள்? அது மானிட புராணத்தைப்பற்றிய போதனையோ, அல்லது கவியின் கற்பனையோ, கனவோ அல்ல. இந்த வகையான பிராயச்சித்தம் மானிடர்களிடையில் மட்டுமே அறிமுகமாயுள்ளது. ஏனெனில், இது உண்மையில் சம்பவித்தது. கட்டுக்கதைக்கு இப்படியொரு கற்பனை பிறந்திராது. தேவனே இதை நியமித்தார். இது கற்பனைக்கு எட்டும் காரியமல்ல.
என் வாலிபப் பிராயத்திலிருந்து,, இயேசுவானவரின் பலியின் மூலம் தோன்றிய இரட்சிப்பின் திட்டத்தை நான் கேள்வியுற்றிருக்கிறேன். எனினும், என் உள்ளான ஆத்துமாவால் நான் அதை அறியவில்லை. ஒளி இருந்தும் நான் அந்தகாரத்திலிருந்தேன். தேவனே அச்சத்தியத்தை எனக்கு உணர்த்த வேண்டியதிருந்தது. தேவன் நீதியுள்ளவராயிருக்கும்படி, பாவங்களை நிவிர்த்திப்பவராய் இயேசு உள்ளாரென்று வேதத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததை நான் ஒருபோதும் வாசித்தே இராததுபோல், அது எனக்கு ஒரு புதிய வெளிப்படுத்தலாயிருந்தது. புதுப் பிறவிபெறும் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும், ஆண்டவரான இயேசு மாற்றாக இருக்கும் மகிமையான கொள்கையைக் காணும்போதெல்லாம் அது ஒரு வெளிப்படுத்தலாகவே அவர்களுக்கு வரவேண்டும் போலும். பிறர் பொருட்டுச் செய்கிற தியாகத்தின் (பலி) வழியாக இரட்சிப்பு சாத்தியமென்பதும் முதல் சட்டதிட்டமான நியாயப்பிரமாணத்தில் அதற்கு வழிசெய்யப்பட்டு, ஈடாக வேறு பலி இடம் பெற ஒழுங்கு செய்யப்பட்டதென்பதும் எனக்குப் புரிந்தது. பிதாவோடு சமத்துவமுள்ளவரும், பிதாவைப்போல் என்றென்றும் நிலைத்திருப்பவருமான தேவ குமாரன், தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு ஜனத்துக்காகப் பாடுபட்டு அவர்களை இரட்சிக்கும்படி அநாதி கால முதல் அவரவர்களின் உடன்படிக்கை தலைவராக நியமிக்கப்பட்டிருந்தாரென்பதை நான் காணமுடிந்தது. மனித சமுதாயத்தின் பிரதிநிதியான முதல் ஆதாம் நிமித்தமே நாம் வீழ்ந்தாலும், நம் வீழ்ச்சி தனிப்பட்டமுறையில் இல்லையென்பதாலும், தம் ஜனத்தின் இரண்டாம் ஆதாமாயிருப்பதற்கு அவர்களின் உடன்படிக்கைத் தலைவராயிருக்க முன்வந்த ஓர் இரண்டாம் பிரதிநிதியால் நாம் மீட்கப்பட ஏதுவுண்டாயிற்று. நான் பாவம் புரிவதற்கு முன்னரே, என் ஆதித்தந்தையின் பாவத்தால் நான் வீழ்ந்திருந்தேன் என்பதை நான் அறிந்தேன். ஆகவே சட்டத்தின் நியதிப்படி, இரண்டாம் தலைவரும் பிரதிநிதியுமான ஒருவரால் நான் எழுந்திருக்க முடிந்ததுபற்றிக் களிப்புற்றேன். ஆதாமால் ஏற்பட்ட வீழ்ச்சி ஒரு குறுகிய வழியையே தப்புவதற்கு விட்டு வைத்திருந்தது. முதல் ஆதாமால் நேர்ந்த நாசத்தை இன்னொரு ஆதாம் வந்து மாற்றிச் செய்ய முடிந்தது.
ஒரு நீதியுள்ள தேவன் என்னை மன்னிப்பாராவென்று கவலையில் நான் மூழ்கியிருந்தபோது தேவ குமாரனானவர் மனித உருவெடுத்து, தன் பாக்கியமான தன்மையால், தம் சரீரத்தில் என் பாவத்தை ஏற்று, தம்மைச் சிலுவையில் ஓப்புக்கொடுத்தாரென்பதை விசுவாசத்தால் கண்டறிந்தேன். எனக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்ததென்பதையும் அவருடைய தழும்புகளால் நான் குணமானேன் என்பதையும் உணர்ந்தேன். பிரியமான நண்பரே! எப்போதாகிலும் இதை நீர் உணர்ந்ததுண்டா? அபராதம் அளிக்காமலும், நீதியின் வாள்முனையை மழுங்கச் செய்யாமலும் தேவன் எவ்வாறு நீதியில் நிறைவுள்ளவராயிருக்கக்கூடுமென்பதையும், தம்மிடம் வரும் பாவியிடம் மிகுந்த இரக்கம் பாராட்டி அவர் அவனை நீதிமானாக்கவியலுமென்பதையும் நீங்கள் புரிந்து கொண்டதுண்டா?? மிக மேன்மையும் மகிமையும் பொருந்திய ஈடில்லா தேவ குமாரனானவர் எனக்குரிய ஆக்கினையை ஏற்று நியாயப்பிரமானத்தின்படி என்னை நிரபராதியாக்கியதால்த்தான் தேவனால் என் பாவத்தைக் கவனிக்காமலிருக்க முடிந்தது. சகல பாவிகளும் நரகத்துக்கு அனுப்பப்பட்டு, அதனால் தேவனுடைய சட்டத்தின் நியாயம் நிரூபணமாகியிருக்கக்கூடியதைவிட மிக அதிகமாக இயேசு கிறிஸ்துவின் மரணத்தால் அது திட்டமாயிற்று. ஏனெனில், மனித குலம் முழுவதுமே அல்லலுறுவதைவிட, பாவத்தினிமித்தம் தேவகுமாரன் பாடுபட்டது தேவ அரசியலின் மிக மேன்பட்ட ஏற்பாடாக விளங்குகிறது.
இயேசு தம் சார்பில் மரணதண்டனையை ஏற்று விந்தையைக் காணுங்கள்! அதோ அவர் குருசில் தொங்குகிறார்! நீங்கள் காணத்தகும் பெரும் காட்சி அதுவே. தேவகுமாரனும் மனுஷ குமாரனுமான அவர் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ளவர் கூறத்தரமற்ற வேதனைகளைச் சகித்தவண்ணம் சிலுவையில் தோன்றுகிறார். அக்காட்சியின் மகிமையை என்னென்பது! தவறிழைக்காதவருக்குத் தண்டணை! மாசற்றவருக்கு மரண ஆக்கினை! என்றென்றும் வாழ்த்துக்குரியவர் சாபத்துக்குள்ளானார்! முடிவற்ற மகிமையுள்ளவர் நீச மரணத்துக்குட்பட்டார்! தேவகுமாரனின் வேதனைகளை நான் எவ்வளவு அதிகமாய் காண்கிறேனோ, அவ்வளவு நிச்சயமாய் அப்பாடுகள் என் பாவங்களுக்கு ஈடு கொடுக்கின்றன என்பதை நான் உணருகிறேன். நம்மிலிருந்து தண்டனையை விலக்க அல்லவெனில், வேறு எதற்காக அவர் துன்புற்றார்? தம் மரணத்தால் அதை அவர் விலக்கினாரென்றால், அது விலக்கப்பட்டதென்றே பொருள்.
ஆகையால் அவரில் விசுவாசம் வைப்பவர்கள் அதற்காக அஞ்சவேண்டுவதில்லை. பாவத்திற்குரிய பரிகாரம் கிட்டிவிட்டதால், தேவன் தம் அரியணையின் அஸ்திபாரத்தை அசைக்காமலும், தம் சட்ட புத்தகத்தை எவ்விதத்திலும் கறைப்படுத்தாமலும், மன்னிக்கக்கூடியவராயுள்ளார். தன் மகத்தான வினாவுக்குரிய நிறைவான பதிலை மனச்சாட்சி பெறுகிறது. பாவத்தினால் விளையும தேவ கோபாக்கினை, அது யாதாயிருப்பினும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட பயங்கரமுள்ளதாய்த்தானிருக்கம். அதனாலேயே மோசே, ‘உமது கோபத்தின் வல்லமையை அறிந்துகொள்ளுகிறவன் யார்?” என்று கேட்டான். இருப்பினும் மகிமையின் ஆண்டவர், ‘ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கூவி, தம் ஆவியை ஒப்புக்கொடுத்ததை நாம் கேட்கையிலும், காண்கையிலும், தெய்வீகத் தன்மையுடையவர் அத்தகைய பூரண கீழ்ப்படிதலுடன் ஏற்ற பயங்கர மரணத்தின் மூலமாய், தேவனது நியாயத் தீர்ப்பு, பாவியை நிரபராதியாக்கப் போதுமான நிரூபணத்தைப் பெற்றுவிட்டதென்பதை நாம் உணருகிறோம். தம் சொந்த நியாயப்பிரமானத்துக்குமுன்னால் தேவனே வணங்குவதென்றால் வேறு என்ன செய்யக்கூடும்? அநீதியால் தோன்றும் மானிட பாவம் அனைத்திலும் இருப்பதைக் காட்டிலும், நற்குணத்தால் ஏற்படும் ஒப்புரவாகுதலில் அதிகம் உண்டு.
இயேசுவின் அன்புத் தியாகம் எனும் பெரும் வளைகுடா, மலைகளை நிகர்த்த நம் பாவங்கள் அனைத்தையும் விழுங்கவல்லது. மாந்தரின் இந்த ஒரு பிரதிநிதியின் நிமித்தம் இதர மானிடர் எத்துணை தகுதியற்றவராயிருப்பினும், ஆண்டவர் அவர்களை கருணையோடு நோக்குவார். ஆண்டவரான இயேசு கிறிஸ்து, நாம் அவர் பிதாவின் நியாயமான சீற்றத்துக்குமுன் நிற்காதபடி அவர் தாமே நமக்குப் பிரதிநிதியாக நிற்பது விந்தையிலும் விந்தைதான். எனினும், அவர் அப்படிச் செய்திருக்கிறார். ‘முடிந்தது” தேவன் தமது குமாரனை ஈந்ததால், பாவியைத் தண்டியாது விட்டுவிடுவார். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவன் தம் ஓரேபேறான குமாரன்பேரில் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் சுமத்தி விட்டபடியால், உங்கள் பாவங்களை அவர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார். நீங்கள் இயேசுவை விசுவாசித்தீர்களாயின் (அதுதான் முக்கியம்), தம் ஜனத்துக்காகப் போக்காடாக (ளுஉயிநபழயவ) இருந்தவரால் உங்கள் பாவங்கள் யாவும் சுமந்து தீர்க்கப்பட்டாயிற்றென்பது நிச்சயம்.
அவரை விசுவாசிப்பதென்றால் என்ன? அவரே தேவனும் இரட்சகருமானவர் என்று வெறும் வார்த்தைகளால் கூறுவதுடன் நில்லாது, அவரில் முற்றுமாகவும் பூரணமாகவும் நம்பிக்கை வைத்து, இவ்வினாடிமுதல் நித்திய காலம் உங்கள் சகல இரட்சிப்புக்கும் அவரையே உங்கள் ஆண்டவராகவும், உங்கள் நிர்வாகியாகவும், உங்களுக்கு எல்லாமாகவும் அவரை நீங்கள் ஏற்க வேண்டும். உங்களுக்கு இயேசு வேண்டுமானால், உங்களை அவர் ஏற்கெனவே தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டார். அவரை நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் நரகத்துக்குச் செல்லமாட்டீர்கள். அவ்வாறாயிருப்பின், கிறிஸ்து புரிந்த தியாகத்துக்குப் பலனில்லாதது போலாகும். ஒரு பலி ஏற்றுக்கொள்ளப்பட்டபின்னர் , யாருக்காக அந்தப் பலி அங்கீகரிக்கப்பட்டதோ, அவர்களுடைய ஆத்துமா மரிப்பது முரணானது. விசுவாசிக்கும் ஆத்துமா ஆக்கினைக்கு உட்படுத்தப்படுமாயின், பலி எதற்கு? எனக்குப் பதிலாக இயேசு மரித்தாரெனில், நானும் ஏன் மரிக்கவேண்டும்? ஒவ்வொரு விசுவாசியும் தனக்காகவே இந்தப் பலி அர்ப்பணிக்கப்பட்டதென்று உரிமை பாராட்டலாம். விசுவாசத்துடன் அவர் தன் கைகளை அதன்மேல் வைத்து அதைத் தனதாக்கிக் கொண்டமையால், தான் ஒருபோதும் அழிவுக்குள்ளாக முடியாதென்பதில் அவர் உறுதிகொள்ளலாம். தேவன் நம் சார்பில் இக்காணிக்கையைப் பெற்றுக்கொண்டபின்னர், நமக்கு மரண ஆக்கினை அளிக்கமாட்டார். தம் சொந்த மைந்தரின் இரத்தத்தால் எழுதப்பட்ட மன்னிப்பை வாசித்துவிட்டு நம்மைத் தாக்குவது தேவனால் கூடாத காரியம். நீங்கள் இயேசுவை இக்கணமே நோக்கிப்பார்க்கவும், குற்றமிழைத்தவனுக்குக் கிருபையின் ஊற்றாயிருக்கும் இயேசுவையே ஆரம்பமாகக் கொண்டு நீங்கள் துலங்கவும் உங்களுக்கு அருள் வெளிப்பட்டால் எவ்வுளவு நலமாயிருக்கும்!
‘அவர் பாவியை நீதிமானாக்குகிறார்”, ‘தேவனே நீதிமான்களாக்குகிறவர்” என்பதால், இந்த ஒரே காரணத்தினிமித்தம் அது நிறைவேறக்கூடும். அவர் அதை தம் தெய்வீக மைந்தரின் பாவ நிவாரண பலியின்மூலம் ஆற்றுகிறார். எனவே, எவ்வித கேள்வியும் எழவொண்ணா வகையில் இதை நியாயமாகச் செய்வது சத்தியமே. தவிர, வானமும் பூமியும் ஒழிந்துபோகும் இந்த இறுதிப் பெரு நாளிலே, இந்நீதிமுறை செல்லுபடியாகாதென்று எவருமே மறுக்கக்கூடாதவாறு அது எவ்வளவு பூரணமாக நிறைவெய்தும், ‘ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்” ரோமர் 8:33-34.
அந்தோ பரிதாப நிலையிலிருப்போரே! நீங்கள் உள்ள வண்ணமாகவே இப்போது இந்த ஜீவப் படகில் ஏறிக்கொள்ளமாட்டீர்களா? இங்கே நீங்கள் அழிவினின்று பாதுகாக்கப்படுவீர்கள்! நிச்சயமான இந்த மீட்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். ‘என்னிடம் ஒன்றுமில்லை” என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் எதையும் கொண்டு வரவேண்டுமென்பதில்லை. நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பி ஓடுபவர்கள் தங்கள் மேலாடைகளையும் கூட விட்டு விட்டுச் செல்லுவார்கள் நீங்கள் இருக்கிறபடியே ஜீவப்படகில் தாவியேறிக்கொள்ளுங்கள்.
உங்களை உற்சாகப்படுத்துவதற்காக என்னைப்பற்றிய ஒன்றைக் குறிப்பிடுகிறேன். கல்வாரியின் சிலுவையில் பாவிகளுக்காக நிறைவேற்றப்பட்ட பூரண பரிகாரத்தில்தான் நான் பரத்தை அடைவதற்கான ஒரே நம்பிக்கை உள்ளது. எனக்கு அசைக்கமுடியாத நிச்சயம் உண்டு. வேறெந்த வழியிலும் எனக்கு நம்பிக்கையின் சாயல்கூடக் கிடையாது. என்னை ஒத்த நிலையிலே நீங்களும் இருக்கிறீர்கள். ஏனெனில் நம்மில் எவருடமும் நம்பிக்கைக்குப் பாத்திரமான எதுவுமேயில்லை. இப்போது நாம் நம் கைகளை இணைத்து, சிலுவையண்டையில் சேர்ந்து நின்று, பாவிகளுக்காக தம் இரத்தத்தைச் சிந்தின அவரிடமே நம் ஆத்துமாக்களை முற்றுமாக ஒப்படைப்போம். அந்த ஒரே இரட்சகரால் நாம் இரட்சிக்கப்படுவோம். அவரை நம்பியதினிமித்தம் நீங்கள் அழிவீர்களாயின், நானும் அழியவேண்டியதுதான். உங்கள் முன் நான் வைத்த சுவிசேஷத்தில் என் சொந்த விசுவாசம் எவ்வளவு பெரிதாயுள்ளதென்பதை நிரூபிக்க நான் இன்னும் என்ன செய்யவேண்டும்??










