அதிகாரம் 8
தேவனின் கட்டளை வாசிக்கப்படுதல்
வசனம் 8:1-3
ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்தமோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள். அப்படியே ஏழாம் மாதம் முதல்தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து, தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும்,கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான். சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
அலங்கங்கள் கட்டி முடிக்கப்பட்டபின் முதல்வேலையாக ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணப் புத்தகம் வாசிக்கப்படுவதைக் கேட்க ஒன்று கூடினார்கள். கர்த்தர், அன்று மோசேக்குச் சொன்ன ஜனங்களைக் கூடிவரச் செய். அவர்களுக்கு தண்ணீர்கொடுப்பேன்….. என்னும் வார்த்தைகளை நினைவுகூருவோமாக (எண்.21:16). ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்பாகக் கூடி தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க நின்றார்கள். அவர்கள் ஒரு பிரசங்கியாரைக் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வேதபாரகனாகிய எஸ்றாவைத்தான் அழைத்தார்கள். தேவனால் மோசேக்கு இஸ்ரவேலர்களுக்காகக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களின் புத்தகத்தைக் கொண்டு வந்து வாசிக்க வேண்டும் என்று அவாகள் கேட்டனர். அந்த அசல் புத்தகத்தையே கொண்டு வந்து வாசிக்கச் சொன்னார்கள் அவர்கள். அதைத்தான் தேவன் நம்மிடமிருந்து எதிர்நோக்குகிறார். தேவனுடைய புத்தகத்தின் வார்த்தைகளைத்தான் நாம் வாசிக்கவேண்டும். பலவேளைகளில் நாம் வேதத்தில் உள்ள யாதேனும் ஒரு புத்தகத்தின் விளக்கங்கள் கூறப்படும்போது, கூறுகிறவரைப் பற்றி அதிக அக்கறைகாட்டி செயல்ப்படுவது உண்டு. அதுவும் அந்த நேரத்திற்கு ஏற்றதுதான். ஆனால் தேவன் அவருடைய வார்த்தைகள் முதலில் கேட்கப்படுவதைத்தான் நம்மிடம் எதிர்பாhர்க்கிறார்.
இது, அலங்கங்கள் கட்டி முடிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் நடந்த நிகழ்ச்சியாகும். அந்த மக்களுக்கு எது அதிக முக்கியம் என்பது நன்கு தெரியும். எஸ்றாவும்கூட நாம் வாசிக்கிறபடி, அப்படித்தான் முதலில் செய்தான். வேதபாரகனும், ஆசாரியனுமான எஸ்றாவும் முதலில் மோசேயின் நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கொண்டு வந்து ஜனங்களிடத்தில் நின்று வாசித்தான். ஜனங்கள் என்று சொல்லும்போது, ஆண்களும், பெண்களும் செவிகொடுக்கக்கூடிய அனைவரையுமே அது குறிக்கும்.
வசனம் 8:4-5
வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான். அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள். எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான். அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
எஸ்றா மரத்தால் அமைக்கப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின் மேல் நின்று அதை வாசித்தான். அவனுக்கு உதவியாக 13 பேர் அவனருகில் நின்றார்கள். முதலாவது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரித்தான். ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து அதற்கு மறுமொழியாக ஆமென் ஆமென் என்று சொல்லி குனிந்து, முகங்குப்புற விழுந்து கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். எஸ்றா நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் காலைமுதல் நண்பகல் வரை வாசித்து விளக்கினான். அவன் அதை வாசித்தபொழுது எல்லாரும் கவனமாய் செவிகொடுத்தார்கள். அந்தத் தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்துக் கவனித்தார்கள். நாம் வேதம் வாசிக்கப்படும்போது, வேறு எண்ணங்கள் இல்லாமல் கவனத்துடன் அதைக் கேட்கிறதுண்டா? இந்த மனிதர், தங்களுடைய வீடுகளிலே வேதபிரமாண புத்தகத்தின் நகல்கள் யாதொன்றையும் பெற்றிருக்கவில்லை. ஆகையால் அவர்கள் தெளிவாகக் கேட்கும்படிக்கு அதைக் கொண்டு வந்து வாசிக்கும்படி எஸ்றாவைக் கேட்டார்கள்.
வசனம் 8:6-7
அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான். ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக்குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒபதியா, மாசெயா, கேலிதா,அசரியா, யோசபாத், ஆனான் பெலாயா, என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள். ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
இந்த வாசிப்பும், விளக்கமும் எவ்வாறு எஸ்றாவாலும் அவனது உதவிக்காரராலும் நடைபெற்றது? எஸ்றா முதலில் சில வாக்கியங்களை வாசித்திருப்பான். பிறகு அவனும் அவனுடனிருந்த உதவிக்காரார்களும் அதைப் பற்றிய விளக்கங்களை எளிய நடையில் அவர்களுக்கு விளக்கிக் கூறியிருப்பர். நாம் நமது ஆலயங்களில்கூட இதுபோன்ற விளக்க முறைகளைப் பின்பற்றுதல் நலம் ஆகும். நமது ஆலயங்களில் போதிப்பவர்கள் சில வேளைகளில் கேட்பவர்களுக்கு விளங்காத கடினமான பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். நமது ஆண்டவர் இயேசு ஒருபோதும் அதுபோல் செய்யவில்லை. அவர் எளிய வார்த்தைகளினாலே மக்களுக்குப் விளங்கப் போதித்தார். இங்கே அதுபோலவே எஸ்றாவும் அவனுடனிருந்த உதவியாளர்களும், விளங்கிக்கொள்ள கடினமாக இருந்த செய்திகளையும் வாக்கியங்களையும் வார்த்தைகளையும் விளக்கிக் கூறினார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் அதுபோலவே நாமும் வசனமாகிய அப்பத்தை அனைவருக்கும் பிட்டு பகிர்ந்து விளங்கும்படி சிறு துண்டுகளாக அளிக்கவேண்டும்.
வசனம் 8:8
அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
அவர் செய்த வாசித்ததிலே மூன்று நிலைகளை நமக்குக் காண்கிறோம். (1) அவர்கள் தெளிவாக, எல்லாரும் கேட்கத்தக்கதாகப் பேசினார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே முணுமுணுக்கவில்லை. (2) கடினமான வார்த்தைகளை, அர்த்தம் புரிய விளக்கிக்கூறினார்கள். (3) அவர்கள் வாசித்ததன் பொருள் விளங்கத்தக்கதாக வாசித்து, அதன் பொருளைக் கேட்டு விளங்கிக்கொள்ள, கருத்தைப் புரிந்துகொள்ள உதவிசெய்தனர்.
வசனம் 8:9
ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள். நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
எஸ்றாவும் அவனுடனிருந்த உதவிக்காரரும் செய்த இந்தத் தெளிவான, எளிய போதனையின் விளைவாக ஏற்பட்ட நிகழ்ச்சி என்னவெனில் அந்த ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்டு அழுதார்கள். ஆனால் அது நெகேமியா அழவேண்டிய நாளல்ல. அப்போது நெகேமியா, எஸ்றாவும் மற்ற லேவியருமானவர்களுடன் சேர்ந்து அழுதுகொண்டிருந்த ஜனங்களை ஆறுதல்படுத்தி அமைதிப்படுத்த முற்பட்டனர். ஜனங்களை நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள். நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்று சொல்லி அமைதிப்படுத்த முயன்றனர். மேலும், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான் எஸ்றா. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலி.4:4) என்று பவுல் கூறியுள்ளதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோமல்லவா? நமது பாவங்களுக்காக நாம் வருத்தப்பட்டு அழவேண்டியதே. ஆனால் நமது இரட்சகராகிய ஆண்டவருக்குள் மகிழ்ந்து களிகூற வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
வசனம் 8:10
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள். இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
மேலும் நெகேமியா வேறு சில நல்லாலோசனைகளை வழங்குகிறான். நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள் என்று கூறுகிறான். நெகேமியா மிகவும் கருணை நிறைந்தவன் ஆகையால் மற்றவர்களுக்கும் இதுபோன்ற உத்திகளைக் கூறுகிறான். பெரும்பாலும் நமது கொடைகள் எனப்படுபவை நமக்குத் திரும்பக் கொடுக்கக்கூடியவர்களுக்கே இருக்கின்றன. தேவனாகிய ஆண்டவர் நமக்கு ஓர் உதாரணத்தைக் கூறியிருக்கிறார். நீ விருந்துபண்ணும்போது உன் சகோதரரையாகிலும் உன் பந்து ஜனங்களையாகிலும் ஐசுவரியமுள்ள அயலக்தாரையாகிலும் அழைக்கவேண்டாம். அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள். அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய். அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள். கர்த்தர் உனக்குப் பதில் செய்வார் (லூக்.14:12-14). நெகேமியாவும் இங்கே உண்மையான கொடையைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறுகிறான். ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள் என்கிறான்.
வசனம் 8:11-12
லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
அப்போது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்து கொண்டபடியால் புசித்துக் குடிக்கவும் பங்குகளை அனுப்பவும் மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள். தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால் என்று வேதம் கூறுகிறது. எஸ்றா, நெகேமியா ஆகிய இருவருமே நியாயப்பிரமாணப் புத்தகத்தில் உள்ள கற்பனைகளை ஜனங்கள் சரிவரப் புரிநதுகொள்ளவேண்டுமே என்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள். அந்த நியாயப் பிரமாண விதிகளை விளக்கிக் கூறுவதில் அவர்கள் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதினால் , சரிவர உணர்ந்துகொண்ட அவர்கள் மகிழ்ச்சியோடே வீடுகளுக்குத் திரும்பிச்சென்றார்கள். கர்த்தருடைய வார்த்தைகளைப் போதிக்கும் போது அதிக கவனத்துடன் நாம் செயல்ப்படவேண்டும், இல்லையெனில் அது நாம் நமக்குள் பேசிக்கொள்ளும் ஒரு செய்தியாகவே இருக்கும். கேட்கிறவர்களுக்குத் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தருவதாக அமையாது.
வசனம் 8:13
மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
அடுத்தநாளிலே வேறோரு கூட்டத்தார் எஸ்றாவினிடத்திற்கு வந்தனர். அவர்கள் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும் ஆசாரியரும், லேவியருமேயாவர். நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைத் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும் என்றும், அதை சரிவரப்போதிக்கவேண்டும் என்ற நோக்கத்துடனும் அவர்கள் கூடிவந்தனர். எஸ்றாதான் அதை அவர்களுக்கு விளக்கக்கூடியவன். இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேறின வேதபாரகனாயிருந்தான் (எஸ்.7:6). மற்றவர்களுக்கும் போதிக்கக்கூடியவனாகவிருந்தது எவ்வளவு ஆச்சரியமான ஆசீர்வாதம். ஒவ்வொரு காரியத்திற்காகவும் தேவன் ஒவ்வொருவரை ஆயத்தப்படுத்தி வைக்கிறார் ஆன்றோ? நாமும் மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்கதாக தீமோ.2:22 தேவவசனங்களை நன்கு கற்றுக்கொள்ள வேண்டுமன்றோ? தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட போதகர்களுக்காக, தேவனுக்கு ஸ்தோத்திரம்.
வசனம் 8:14-15
அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியருக்கிறதைக் கண்டார்கள். ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்.
அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேலர் அந்தப் புசிப்பின் பண்டிகையிலே, கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறதைக் கண்டார்கள். மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்சை மட்டைகளையும், மற்றும் அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டு அமைக்கப்பட்ட கூடாரங்கள் ஆகும். இந்தக் கூடாரங்கள் பகலில் வெயிலினின்றும் இரவில் பெய்யும் பனியினின்றும் பாதுகாப்பாக இருக்கவல்லதாகும். அது இஸ்ரவேலர் வனாந்தரங்களில் பயணிகளாக இருந்தபோது தேவன் மோசேக்குக் கற்பித்த முறைமைகளின்படியானதொரு கட்டளையாகும். அந்தப் பண்டிகையின் முறை இரண்டு காலப்பிரிவுகளைக் கொண்டதாகும். முதலாவதாக நிலத்தின் பலனைச் சேகரித்து வைத்தபின் புசித்துக் குடித்து மகிழ்வதாகும். இதனை ஏழநாள் அவர்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவதாக, அந்த ஏழுநாள்களும் தேவன் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை நினைவுகூரும்படி அந்தத் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அந்தக் கூடாரங்களிலே குடியிருக்கவேண்டும் (லேவி.23:34-42).
வசனம் 8:16-19
அப்படியே ஜனங்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிரகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள். இந்தப்பிரகாரமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார் எல்லாரும் கூடாரங்களைப் போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள். இப்படியே நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் செய்யாதிருந்து இப்பொழுது செய்தபடியால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது. முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது. ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள். எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.
ஜனங்கள் கூறப்பட்டதைக் கேட்டு விளங்கிக் கொண்டவுடனே, அவர்கள் உடனே புறப்பட்டு காடுகளுக்குள் சென்று, தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளைக்கொண்டு வந்து அவர்களுக்குக் கூடாரங்களை அமைக்க முற்பட்டனர். அவைகளைக் கொண்டு வந்து அவரவர் தங்கள் வீடுகள் மேலும் தங்கள் முற்றங்களிலும் தேவனுடைய ஆலயப் பிரகாரங்களிலும், தண்Pணீர்வாசல் வீதியிலும் மற்றும் பலவாசல் வீதிகளிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள். இவ்விதமாய்க் கூடாரங்களை அமைத்து ஏழநாள் அந்தக் கூடாரங்களிலே குடியிருந்தார்கள். அது பார்ப்பதற்க மிகவும் அழகானதொரு அமைப்பு ஆகும். பார்க்கும் இடமெல்லாம் வெவ்வேறு அளவிலான அழகிய பச்சை இலைகளால் மூடப்பட்ட கூடாரங்கள். அவர்கள் புசித்துக் குடித்து, பேசி, அந்தக் கூடாரங்களிலேயே உறங்கிக் கழித்தனர். நிச்சயமாக, இந்த அமைப்பு அவர்களின் முன்னோர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தபோது 40 வருடங்களாக கூடாரங்களிலே வாழ்ந்து வனாந்தரங்களைக் கடந்த வரலாறுகளை அவர்கள் நினைவுகூர உதவியது.
யோசுவாவின் காலமுதல் இந்தக் கூடாரப்பண்டிகை கொண்டாடப்படாமலிருந்தது. இப்போது எஸ்றா, நெகேமியாவினால் கொண்டாடப்பட்டது. இப்போது யோசுவாவின் காலத்திற்குப் பின், முதன்முறையாகக் கொண்டாடப்பட்டபோது மிகுந்த சந்தோஷமுண்டாகியிருந்தது. கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும்போது உண்மையான மகிழ்ச்சி உண்டாவதைக் காணமுடிகிறது.
எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தான். உபாகமப்புத்தகத்திலே, ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலே , கூடாரப்பண்டிகையில்….. இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க, அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய்…. புருஷர்களு;, ஸ்திரீகளும், பிள்ளைகளும்… அதைக் கற்றுக்கொண்டு தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படி செய்யக் கவனமாயிருக்கும்…. (உபா.31:11-13) என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் எஸ்றா நியாயப்பிரமாண புத்தகத்தைத் திறந்து வாசித்தான். அதை அவன் ஒவ்வொரு நாளுமாக ஏழுநாளும் வாசித்தான். ஒவ்வொரு நாளும் திறந்தவெளியில் அது வாசிக்கப்படுவதை ஜனங்களெல்லாரும் கேட்டார்கள். எவ்வளவு ஆச்சரியமான ஏராளமான ஜனக்கூட்டம்! எட்டாம் நாளோவெனில் முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்புநாளாக அது கொண்டாடப்பட்டது. இந்த எட்டாம்நாள் கொண்டாட்டமும் மோசேயின் கட்டளையின்படியே கொண்டாடப்பட்டதாகும் (எண்.29:35).











