- தவிர்கவேண்டிய தீமைகள்
தியான வாசிப்பு: யோவான் 18:1-3, 20:1-6, 22:9-10,15,16,21-27,32-34
கர்த்தர் தமது ஜனங்களின் மத்தியில் வாசம்பண்ணினார். இஸ்ரவேலரின் வனாந்தரக் கூடாரம் வாழ்க்கையிலும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்கள் பாளயத்தின் மத்தியிலும் இருந்தது. அப்படியே, கானான் நாட்டிலும் இஸ்ரவேலரின் சுதந்தரப் பூமியின் நடுவே கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரம் அமைக்கப்பட்டது. இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே கர்த்தருக்கு ஆசரிப்புக்கூடாரத்தை நிறுத்தினார்கள். இந்தச் சீலோவிலே இருந்த ஆசரிப்புக்கூடாரம் இஸ்ரவேலரின் சுதந்திரத் தேசத்தின் நடுநாயகம். ஆம், எப்பொழுதுமே கர்த்தர் தமது ஜனத்தின் மத்தியில் வாசம்பண்ண விரும்புகிறவர். தனி ஒரு மனிதனின் இருதயங்களில் வீற்றிருக்க ஆசீக்கிறவர். இரண்டு பேராவது மூன்று பேராவது, கிறிஸ்துவின் நாமத்தில் கூடியிருக்கும்போது, அங்கே அவர்கள் மத்தியில் நான் இருப்பேன் என்று வாக்கருளியுள்ளார். இயேசு கிறிஸ்துதான் மூவுலகின் நடுநாயகம். மோட்சத்தின் நடு மையம். கிறிஸ்தவ வாழ்க்கையின் உயிர்நிலை. ஒரு கிறிஸ்தவனின் உயிருக்கு உயிர். கிறிஸ்து கிறிஸ்தவனிலும் கிறிஸ்தவன் கிறிஸ்துவிலும் இருக்கவேண்டும். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் கிறிஸ்தவன் அல்ல.
கானான் தேசத்தைச் சுதந்தரிப்பதற்காக இஸ்ரவேலர் எல்லாரும் மொத்தமாகக் கர்த்தரின் தலைமையின்கீழ் ஒத்துழைப்போடு ஏழு ஆண்டுகள் பெரும் போர் புரிந்தார்கள். யோர்தானைக் கடந்தார்கள். எரிகோவைக் கர்த்தர் அவர்களுக்குமுன் விழப்பண்ணினார்கள். மற்றப் பிரதேசங்களையும் கர்த்தரின் சகாயத்தால் அவர்கள் போராடிப் பிடித்தார்கள். சீட்டுப்போட்டுக் கர்த்தர் தங்களுக்குச் சுதந்திரப் பாகமாகக் கொடுத்த பிரதேசத்தைப் பெற்றார்கள். கர்த்தரின் ஒத்தாசையால் கானான் தேசம் அவர்கள் கைவசமாயிற்று. முற்பிதாக்களுக்கு ஆண்டவர் ஆணையிட்ட தேசத்தை இஸ்ரவேல் புத்திரர் இப்பொழுது சுதந்தரித்துக் கொண்டார்கள். தாங்கள் பெற்ற சுதந்தரத்தைக் காப்பாற்றி அதைப் பெரிதாக்கிக் கொள்ளவேண்டியது ஒவ்வொரு கோத்திரத்தாரின்மீதும் விழுந்த பொறுப்பு. தங்களுக்குக் கர்த்தர் கானான் தேசத்தை எவ்வாறு கை நழுவ விடாது காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதுதான் இப்பொழுது பிரச்சனை.
ஓவ்வொரு கிறிஸ்தவனும் தான் பெற்றுள்ள இரட்சிப்பை முடிவுபரியந்தமும் காப்பாற்றிக் கொள்ள, கண்ணுங்கருத்துமாய் இருத்தல்வேண்டும். தினந்தோறும் தனது இரட்சிப்பைக் காப்பாற்றிக்கொள்ள ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும். எப்பொழுதும் விழித்திருந்து ஜெபம்பண்ணவேண்டும். சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம்போல எவனை விழுங்கலாமென்று ஓயாது, ஒழியாது சுற்றித்திரிகிறபடியால், ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான் பெற்ற இரட்சிப்பைக் கடைசிவரை காப்பாற்றிக்கொள்ள எச்சரிக்கையோடு இருத்தல் வேண்டும். வெற்றியின் பழைய அனுபவம் அவனுக்கு மீண்டும் வெற்றியைக் கொண்டு வராது. இரட்சிப்பை அளிக்காது. அவனுக்கு கடைசிவரை இரட்சிப்பையும், பரிசுத்த வெற்றிவாழ்வையும் நிச்சயமாய்க் கொடுக்க வல்லவர் கர்த்தர் ஒருவர்தாம்.
ஆகையால் கிறிஸ்தவன் ஒவ்வொரு நாளும் கர்த்தரையே நம்பி ஜீவித்திருக்கவேண்டும். தினந்தோறும் கிறிஸ்துவைப்பற்றிய விசுவாசத்தில் வளரவேண்டும். ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அதற்கு உடனே கீழ்ப்படியவேண்டும். தினந்தோறும் கர்த்தருக்குக் காத்திருத்தல் வேண்டும். அதிகாலையில் தனி ஜெபத்திலும், வேதவாசிப்புத் தியானத்திலும் தரித்திருக்க மறக்கக்கூடாது. இதுதான் கிறிஸ்தவ வெற்றிவாழ்வின் புனித நெறி. ஓவ்வொருநாள் காலையிலும் கர்த்தர் நமமோடு பேசுவதை நாம் அமைதலோடு கேட்கவேண்டும். நாமும் அவரோடு பேசவேண்டும். நம்முடைய கண்ணீர், கவலை, பெருமூச்சுகளையெல்லாம் கர்த்தருடைய பாதத்தில் கொட்டிவிடவேண்டும். அவர் நம்மை நேசிக்கிறபடியினால் நம்முடைய கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்துவிடவேண்டும். அவர் தரும் கட்டளையைச் சிரமேற்கொண்டு, நிறைவேற்றவேண்டும். ஒவ்வொரு நாளும் அவருடைய திருப்பணிக்கென்று, நம்மை முற்றிலும் ஒப்படைத்துவிடவேண்டும். இடைவிடாமல் ஜெபம்பண்ணவேண்டும். கிறிஸ்துவோடு உள்ள உறவுக்குப் பங்கம் விளைவிக்கும் எப்பாவத்தையும் உடனே அகற்றிவிடவேண்டும். எதை மறந்தாலும் கிறிஸ்துவை மறக்கக்கூடாது. புரிபூரணப் பரிசுத்த வெற்றி வாழ்வே, எப்பொழுதும் நம் இலக்காக இருக்கவேண்டும். அதன் இரகசியம் இயேசுதான். அவர் இன்றேல், தூயவெற்றி வாழ்வு இல்லை.
இப் பரிசுத்த வெற்றி வாழ்வுக்கு இடையூறாக எழும்பும் மூன்று தீமைகளை உற்றுநோக்குவோம். அவற்றுள் முதல் தீமை, யோசுவா 18ம் அதிகாரம் பதின்மூன்றாம் வசனத்தில் வரையப்பட்டுள்ளது. கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு நீங்கள் எந்தமட்டும் அசதியாய் இருப்பீர்கள். இந்த அசதிதான் சுதந்திரத்தை வேரறுக்கும் விடப்பூச்சி. அசதியால் நாடு இழந்தவர் அநேகர். அசதியால் வேலை இழந்தவர் பலர், அசதியால் உயிர் இழந்தவர் பலர். அசதியால் வாழ்வு சீர்குலைந்தோர் பலர். அசதியால் மேம்பாட்டிற்கு முட்டுக்கட்டை போட்டவர் பலர். அசதியால் தங்களுக்கு அருமையானவர்களை இழந்தவர் பலர். அசதியால் வாழ்க்கையில் வீழ்ச்சியுற்றோர் பலர். பேதுரு அசதியால் விழித்திருந்து ஜெபிக்காது, துயில் கொண்டான் இந்த அசதியின் பலனாகத் தனது ஆருயிர் நாயகரையே அறியேன் என்று மறுதலிக்க நேர்ந்தது. ஆ! அசதி என்னும் கோடரி வாழ்வு என்னும் மரத்தையே வெட்டிவிடலாம் அல்லவா? ஆகையால்த்தான் நமது அருமை ஆண்டவர் எப்பொழுதும் விழித்திருந்து ஜெபியுங்கள் என்று தமது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆவியிலே அசதியாய் இராமல், ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். ஆவியிலே அனலாய் இருக்கவேண்டும். கர்த்தருக்குள் எப்பொழுதும் உறுதியாய்த் தரித்திருக்கவேண்டும். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினால் வெல்ல, கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டும். ஒரு கிறிஸ்தவன் ஒருக்காலும் அசதியாய் இருக்கக்கூடாது. அவனைத் தாங்கி விழத்தள்ள சாத்தான் எப்பொழுதும் சுறுசுறுப்புள்ளவனாய் இருக்கிறான் என்பதை எப்பொழுதும் நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும். அசதி என்பது சாத்தானின் அகராதியில் இல்லை. ஆகவே, கிறிஸ்வனின் அகராதியிலும் அசதி என்ற சொல்லுக்கு இடமே இருக்கக்கூடாது. கிறிஸ்து ஒருநாளும் அசதியாய் இருந்ததில்லை. அவர் அசதியாய் இருக்கிறதுமில்லை. அவர் அசதியாய் இருக்கப்போவதுமில்லை. தெய்வம் எப்படியோ, சீடனும் அப்படியே. கிறிஸ்துவைப் போல் கிறிஸ்தவனும் அசதியற்றவனாய் இருத்தல்வேண்டும்.
எத்தனையே ஆத்துமாக்கள் இன்னும் கிறிஸ்துவை அறியாது, எரிநரகத்துக்குள் துரிதமாய் சென்று கொண்டிருங்குங்கால், கிறிஸ்தவன் இதைப் பார்த்துக்கொண்டு அசதியாய் இருக்கலாமா? உலகமெங்கும் இன்னும் பூரணமாய் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படவில்லையே. நமது நாதரோ, நீங்கள் உலகம் எங்கும்போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைக் பிரசங்கியுங்கள் என்று நமக்குக் கட்டளையிட்டுள்ளாரே. சுவிசேஷ ஒளி இன்னும் பரவாத காரிருள் பிரதேசம் இப்பார்தனில் இன்னும் இருங்குங்கால் ஒரு கிறிஸ்தவன் அசதியாய் இருக்கலாமா? சுவிசேஷத்தைப் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ என்ற பரிசுத்த பவுலைப்போல அசதியை அகற்றி, சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுறுசுறுப்புடன் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது நம்மீது விழுந்த பாக்கியமான பொறுப்பன்றோ! அசதியாய் இராமல் ஐக்கிரதையாய் இருங்கள். ஆவியிலே அனலாய் இருங்கள், விழித்திருங்கள், ஜெபியுங்கள். எப்பொழுதும் கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள்.
கிறிஸ்தவனே, நீ வேதம் வாசித்து எத்தனை நாள் ஆகிவிட்டது? நீ தனித்து ஜெபித்து எத்தனை நாள் ஆகிவிட்டது? நீ சுவிசேஷத் தொண்டாற்றி எத்தனை நாள் ஆகிறது? நீ கிறிஸ்து என்ற பதத்தை உச்சரித்து எத்தனை நாள் ஆகிவிட்டது? நீ சுவிசேஷத் திருப்பணிக்குப் பொருளுதவி செய்து, எத்தனை நாள் ஆகிவிட்டது? நீ இயேசுவின் நாமத்தினிமித்தம் நன்மைசெய்து எத்தனை நாள் ஆகிவிட்டது? நீ செய்த இரகசிய பாவத்தை அறிக்கையிடாது, எத்தனை நாள் நடந்துவிட்டது? இதற்கெல்லாம் காரணம், அசதி, அசதி, அசதி.
ஒரு கிறிஸ்தவனின் பரிசுத்த ஜெபஜீவியத்தைத் தாக்கும் இரண்டாம் தீமை யோசுவா இருபத்திரண்டாம் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இத்தீமையின் பெயர் தப்பப்பிராயம். ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் தவறான எண்ணத்தால் கிறிஸ்தவ உலகில் எவ்வளவு இன்னல்கள் விளைந்துள்ளன. ஒருவரைப்பற்றித் தப்பப்பிராயம் கொள்வதற்கு எவ்வளவாய் முந்திக்கொள்கிறோம். பிறர் குற்றங்களை மன்னித்து, அவர்களைப் பாராட்டுவதற்கு எவ்வளவாய்த் தயங்குகிறோம். பிறரோடு இணங்கி வாழ்வதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஒருவர் கருத்தை ஒருவர் நன்கு அறிவதற்கு முன்னர், அவசரப்பட்டு அதைத் தவறாகக் கருதிவிடக்கூடாது.
இஸ்ரவேலருடைய வாழ்வில் அவசரப்பட்டுப் பிறர் கருத்தைத் தவறாகக் கருதிவிட்ட ஒரு நிகழ்ச்சியை ஆராய்வோம். ரூபன், காத், மனாசே ஆகிய இரண்டரைக் கோத்திரத்தாரும் எழு ஆண்டுகளாக மற்றக் கோத்திரத்தாரோடுகூடக் கானான் தேசத்துக்காகப் போராடினார்கள். கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் கானானைச் சுதந்தரித்துக்கொண்டு, அங்கு குடியிருந்தார்கள். அப்பொழுது யோசுவா ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் அழைத்து, அவர்களை நோக்கி, கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள். நீங்கள் இதுவரைக்கும் அநேகநாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள். இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே அவர்களை இளைப்பாறப்பண்ணினார். ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கீழ்ப்பாகத்திலே வனாந்தரத்தில் உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான சுதந்தர பூமிக்குத் திரும்பிப்போங்கள். ஆனாலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளில் எல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவரைப்பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு பலத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், சேவிக்கிறதற்காகக் கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனைகளின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படி மாத்திரம் வெகு ஜர்கிரதையாய் இருங்கள் என்றான். இவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போனார்கள்.
அவ்வாறு அவர்கள் திரும்பிப் போகையில், யோர்தானின் கரை வந்தபொழுது, அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். இதைக் கானான் நாட்டு இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டபொழுது, அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலே கூடினார்கள். எல்லாரும் யுத்தத்திற்குப் புறப்படும் முன்னர் சில பிரதிநிதிகளைத் தூதாக அனுப்பி, காரியத்தைத் திட்டமாய் ஆராய்ந்துவர, யோர்தானுக்கு கிழக்கே இருக்கிற இரண்டரைக் கோத்திரத்தாரிடத்திலும் அவர்களை அனுப்பினார்கள். அப்பிரதிநிதிகள் வந்து, இரண்டரைக் கோத்திரத்தாரையும் பார்த்து: நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குச் சோரம் போய், கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன? கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர் எல்லார்மேலும் கடுங்கோபம் கொள்வாரே. உங்கள் காணியாட்சியான கானான் தேசத்திற்கு வந்து எங்கள் நடுவே சுதந்திரம் பெற்றுக்கொள்ளலாமே. நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல், உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே கர்த்தருக்கு விரோதமாக இரண்டகம்பண்ணாதிருங்கள் என்று சொன்னார்கள்.
அப்பொழுது இரண்டரைக் கோத்திரத்தாரும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே இதை அறிந்திருக்கிறார். இஸ்ரவேலரும் அறிந்து கொள்வார்கள். ஏதோ அவசரப்பட்டு எங்களைத் தவறாக எண்ணிவிட்டார்கள். இப்பீடம் எழுப்பப்பட்ட நோக்கத்தையும், அவர்கள் சரியாய் அறியாதபடியால், எங்கள்மீது தப்பப்பிராயம் கொண்டுள்ளார்கள். இப்பீடம் இரண்டகத்தினாலாவது கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர். கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகி, வேறோரு தெய்வத்தை நாங்கள் வணங்குகிறதற்காவது அல்லது இப்பீடத்தின்மேல் பலியிடுகிறதற்காவது இந்தப் பீடத்தை நாங்கள் எழுப்பினதுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக. பின்னை ஏன் இந்தப் பலிபீடத்தை எழும்பினோம் என்றால், உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே ஒற்றுமையுண்டு என்பதற்கு நினைவுச் சின்னமாகவே இப்பீடத்தைக் கட்டியுள்ளோம் என்றார்கள்.
நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன? எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார். கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தரிடத்தில் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் இக்காரியத்தைச் செய்தோம். பலியிடுவதற்கும் வணங்குவதற்கும் நாங்கள் இந்தப் பீடத்தை எழுப்பவில்லை. கர்த்தரிடத்தில் எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் பங்கு உண்டு என்பதற்கு அத்தாட்சியாகவும், நீங்களும் நாங்களும் ஒரே இஸ்ரவேலின் சந்ததியார்தாம் என்ற ஒற்றுமையை என்றும் நிலைநாட்டவுமே இந்த நினைவுச் சின்னத்தை அதற்கு சாட்சியாக உண்டுபண்ணினோம். நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பீடத்தில் மாத்திரம் நாங்கள் பலி செலுத்துவோம். தேவனாகிய கர்த்தரையல்லாமல் வேறோரு தெய்வத்தை நாங்கள் வணங்கமாட்டோம் என்றார்கள்.
இவ்விளக்கத்தை இஸ்ரவேலரின் பிரதிநிதிகள் கேட்டபொழுது, இவர்கள் உண்மையை அறந்தார்கள். மனம் மகிழ்ந்தார்கள். கானான் தேசத்திற்குத் திரும்பி வந்து, இஸ்ரவேலருக்கு உண்மையான விவரம் தெரிவித்தார்கள். அச்செய்தியைக் கேட்டு, இஸ்ரவேல் புத்திரரும் தங்கள் பழைய தப்பப்பிராயத்தை மாற்றிக்கொண்டு, இரண்டரைக் கோத்திரத்தார் மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சைவிட்டு, தேவனைத் துதித்து வணங்கினார்கள்.
இச்சம்பவம் நமக்கோர் எச்சரிப்புப் பீடமாகத் திகழ்வதாக. ஒரு தப்பப்பிராயத்தால் ஒரு யுத்தமே எழும்பவிருந்தது. இவ்வாறு தற்காலத் திருச்சபையில் தவறான எண்ணத்தால் எத்தனையோ பூசல்கள் முண்டேவிடுகின்றன. ஒருவருடைய நல்ல கருத்தைப் பின்னொருவர் தவறாக அர்த்தம்பண்ணிக்கொண்டு, அதை நூறத்தனையாக மிகைப்படுத்தி விளம்பரம் செய்துவிடுவதால், எத்தனை கேடுகள் விளைகின்றன? பொய் வதந்திகளை நம்பி, வீடுகளிலும் சபைகளிலும், கிராமங்களிலும், நகரங்களிலும் எத்தனை எத்தனையோ சர்ச்சைகள் எழும்பிவிடுகின்றன. பொய்யான கதைகன் கையும் காலுமின்றி, எவ்வளவு துரிதமாய் காட்டுத் தீபோல் எங்கும் பரவிவிடுகின்றன. கோள்சொல், தீச்சொல், பொய்ச்சொல், பயனில்லாச்சொல் போன்ற இன்னாச் சொற்கள் எத்தனை குடும்பங்களையும் எத்தனை சபைகளையும் தீக்கொழுத்தி, கொழுந்துவிட்டு எரியச்செய்துள்ளன. இவற்றால், ஒரே வீட்டிலுள்ளவர்களுக்குள் சண்டை, ஒரே திருச்சபையிலிருக்கிற கிறிஸ்தவர்களுக்குள் சண்டை, ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிற கிறிஸ்தவ மக்களுக்குள் சண்டை, ஒரே பள்ளியில் பணியாற்றுகிற கிறிஸ்தவ ஆசிரியருக்குள் சண்டை, ஒரே நற்கருணையை வாங்குகிறவர்களுக்குள் சண்டை. தப்பப்பிராயத்தால், தீச்சொற்களால், ஒருவருக்கொருவர் பொருந்தி வாழத் தெரியாத தன்மையால், ஒருவர் குற்றத்தை இன்னொருவர் கிறிஸ்துவுக்குள் பொறுத்து மன்னித்துக்கொள்ளும் கிறிஸ்தவப்பண்பு இல்லாமமையால், கிறிஸ்தவச் சமுதாயத்துக்குள் எழும்பியுள்ள புயல்கள்தான் எவ்வளவோ! கணக்கிலடங்கா! கிறிஸ்தவச் சபையிலுள்ள அநேகப் பிளவுகளுக்கெல்லாம் காரணம் கிறிஸ்தவர்களுக்கு இன்னும் இணங்கி வாழத் தெரியாத தன்மையே.
ஆதிகாலத் திருச்சபை மக்கள் ஒருமனப்பட்டவர்களாய் மகிழ்ச்சியோடும், கபடமில்லா இருதயத்தோடும், அந்நியோன்னிய ஐக்கியத்தில் ஒருமைப்பட்டிருந்தார்கள். காரணம், அவர்களெல்லாரும் ஒரே இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாய், ஒரே கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களாய் இருந்தனர். ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாய் இருந்தனர். மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்கினார்கள். இந்தப் பரிசுத்த இணக்கம் நம்மில் உண்டா? பரிசுத்தாவியானவர் நம் இருதயத்தில் குடியிருந்தால்தானே இந்தப் பரிசுத்த இணக்கம் நமக்குள் இருக்கும். இணக்கமின்மையால் சீரழிந்து, சின்னா பின்னமாகச் சிதைந்துள்ள குடும்பங்கள் எத்தனை? திருச்சபைகள் எத்தனை? இணக்கமின்மை என்னும் தற்கால விஷ ஆயுதத்தைச் சாத்தான் மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்தி எத்தனையோ உள்ளங்களை உடைத்தெறிந்துவிட்டான். எத்தனையோ உள்ளங்களைப் புண்படுத்தியுள்ளான். இணக்கமின்மை என்னும் இத்தீயபண்பை அறவே புறக்கணித்துவிட்டு, அன்பு எனும் பண்பைத் தரித்துக் கொண்டவர்களாய், ஒருவரையொருவர் கனம் பண்ணுவதில் முந்திக்கொள்வோமாக. அன்பினால் ஒருவருக்கொருவர் தொண்டு புரிவோமாக.
நம்மையே புத்திமான்களென்றும், மற்றவர்களெல்லாம் மட்டானவர்களென்றும் எண்ணாதிருப்போமாக. ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருப்போமாக. நாம் தீமையினால் வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்வோமாக. எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுவோமாக. சகோதர சிநேகத்திலே ஒருவர்மேல் ஒருவர் பட்சமாயிருப்போமாக. கூடுமானால் நம்மால் ஆனமட்டும், எல்லா மனுஷரோடும் சமாதானமாய் இருப்போமாக. ஒளியிலிருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இளிலே இருக்கிறான். நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டும் என்பதே நாம் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. தேவனிடத்தில் அன்புகூருகிறேன் என்று ஒருவன் சொல்லியும் தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமல் இருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? அன்பு சகல பாவங்களையும் மூடும். அன்பு எனக்கிராவிட்டால், எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கையில் குறுக்கிடும் மூன்றாம் தீமை அறியாமையாகும். இத் தீமை யோசுவா 20ம் அதிகாரத்தில் தீட்டப்பெற்றுள்ளது. அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போய் அடைக்கலம் பெறுமாறு, ஆறு அடைக்கலப்பட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டன. அறியாமல் கைப்பிசகாய் முற்பகையின்றி, தெரியாது கொன்றதினால், அவ்வாறு அறியாது கொன்றவன் இரத்தப் பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பத்தக்கதாக, யோர்தானுக்கு மேற்புரத்தில் கானான் சுதந்தரப் பூமியில் மூன்று அடைக்கலப் பட்டணங்களும், யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள 2 அரைக் கோத்திரத்hரின் காணியாட்சியில் மூன்று அடைக்கலப் பட்டணங்கள் நிறுவப்பட்டன. அறியாமல் கைப்பிசகாய்க் கொன்றவன் தன் உயிர் தப்ப இவ்வடைக்கலப் பட்டணம் ஒன்றிற்கு ஓடி வர வேண்டும். அப்பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்று கொண்டு, அப்பட்டணத்து மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்லவேண்டும். அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடு குடியிருக்க அவனுக்கு இடம் கொடுப்பார்கள். அவன் லேவியரால் நியாயம் விசாரிக்கப்பட்டு உண்மையாகவே, குற்றம் அற்றவன் என்று தீர்ப்பிடப்பட்டால், அவனைப் பழிவாங்குகிறவன் கைக்கு ஒப்புக்கொடுக்காது, அந்நாட்களில் இருக்கிற பிரதான ஆசாரியன் மரணம் அடையும்வரைக்கும், அவன் அந்த அடைக்கலப் பட்டணத்திலே குடியிருக்கவேண்டும். அக்காலப் பிரதான ஆசாரியன் மரணம் அடைந்த பின்பு, அறியாது கைபிசகாய் கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும், தன் வீட்டிற்கும் திரும்பிப் போகவேண்டும்.
அறியாது நாம் செய்கிற குற்றங்கள் அநேகம். தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ பாவங்களைச் செய்துவிடுகிறோம். கைப்பிசகாய் செய்கிற பிழைகள் ஏராளம். கிறிஸ்துவின் பரிபூரணப் பரிசுத்தத்திற்கு ஒவ்வாது, நாம் செய்வதெல்லாம் பாவமே. கிறிஸ்துவின் மனதைப் புண்படுத்தத்தக்கதாய் நாம் புரிவதெல்லாம் பாவமே. அவருடைய தூயநாமத்திற்கு அவகீர்த்தியை கொண்டு வருவதெல்லாம் பாவமே. அறிந்தோ, அறியாமலோ, நாம் செய்யும் பாவம் எல்லாம் பாவமே. அறியாது கைப்பிசகாய்ச் செய்துவிட்டபடியால் அது குற்றமில்லாது போய்விடாது. அறியாது செய்யும் குற்றமும் குற்றமே. எக் குற்றத்திற்கும் தப்புவதற்கு நமக்கு ஒரே ஓர் அடைக்கலப்பட்டணம்தான் உண்டு. பிளவுண்ட கிறிஸ்துவின் நெஞ்சம்தான் எப்பாவிக்கும் தஞ்சம் தரும் ஒரே ஒப்பற்ற அடைக்கலப் பட்டணமாகும். இதுகாறும் கிறிஸ்துவுக்குள் அடைக்கலம் புகுந்த பஞ்சமா பாதகரெல்லாம் பத்திரமாய்ப் பாதுகாக்கப்பட்டள்ளார்கள். நமது ஒரே ஈடு இணையில்லாத பிரதான ஆசாரியராகிய இயேசுநாதர் நமக்காகக் பழிக்குப் பழியாக கொலைசெய்யப்பட்டுவிட்டார். ஆகவே, இனிப் பழிக்குப் பழியான தண்டனை கிறிஸ்துவுக்குள் இல்லாது, ஒழிந்து போய்விட்டது. கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினதை;தீர்ப்பில்லை. இவ்வாறு அவரது இரத்தத்தால் கழுவப்பட்ட பிள்ளைகளுக்கு அவர் என்றென்றைக்கும் அடைக்கலம் தரும்படியாக அவர் இன்றும் என்றும் உயிரோடு இருக்கிறார். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நமது அடைக்கலநாதர் நம்மோடுகூட இருக்கிறார். பிதாவே, இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று தம்மைக் கொலைசெய்தவர்களுக்காக மன்றாடிய அன்பின் அவதாரம், நாம் அறியாது செய்த பாவங்களையும், அறிந்து செய்த பாவங்களையும் தமது பரிசுத்த இரத்தத்தால் கழுவிச் சுத்திகரிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
நான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து, எனக்கு அடைக்கலம் தந்து, என்னை இரட்சித்தருளும் என் அடைக்கலப்பட்டணமே.










