ஆபிரகாம்
(வாழ்க்கை வரலாறு)
மெசொப்பொத்தாமியா நாட்டில் கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவினுடைய மகனாக ஆபிரகாம் பிறந்தார். (ஆதி.11:26-28, அப்.7:2-3).
தேராகு தன் எழுபதாவது வயதில் ஆபிராமைப் பெற்றான். (ஆதி.11:26)
ஆபிரகாமின் சகோதரர் நாகோர், ஆரான் என்பவர்கள் (ஆதி.11:26-27).
ஆபிராம் (ஆபிரகாம் சாராயை (சாராள்) விவாகம் பண்ணினான். சாராள் பார்வைக்கு மிக அழகுள்ள ஸ்திரீயாயிருந்தாள் (ஆதி.11:29, 12:11).
ஆபிரகாமின் குடும்பத்தினர் விக்கிரக தேவர்களை சேவித்து வந்தார்கள் (யோசு.24:2-3).
ஒருநாள் ஆபிரகாமின் தகப்பன் தேராகு என்பவன் தன் குமாரனாகிய ஆபிரகாமையும் ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும் தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, ஊர் என்கிற கல்தேயருடைய தேசத்தைவிட்டு கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான் (ஆதி.11:31).
அவர்கள் ஆரான் மட்டும் (காரானூர்) வந்தபோது அங்கே இருந்துவிட்டார்கள். இங்கே வைத்து ஆபிரகாமின் தகப்பன் தேராகு தன் இருநூற்று ஐந்தாவது வயதில் மரணமடைந்தான் (ஆதி.11:32).
ஆரானில் (காரானூரில்) வைத்து ஆபிரகாம், நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும் , உன் தகப்பன் வீட்டையும் விட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ என்று கர்த்தருடைய அழைப்பைப் பெற்றான் (ஆதி.12:1, எபி.11:8, அப்.7:2-4).
ஒரு பெரிய ஜாதியின் பிதாவாயிருப்பார் என்ற கர்த்தருடைய வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்குக் கிடைக்கிறது (ஆதி.12:2-3).
கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஏழு ஆசீர்வாதங்கள்.
(ஆதி.12:2-4)
(1) நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.
(2) நான் உன்னை ஆசீர்வதிப்பேன்.
(3) நான் உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்.
(4) நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
(5) உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்.
(6) உன்னைச் சபிக்கிறவர்களைச் சபிப்பேன்.
(7) பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்.
75வது வயதில் ஆபிரகாம் தன் மனைவி சாராளையும் தன் சகோதரனுடைய மகன் லோத்தையும் தாங்கள் சம்பாதித்திருந்த சம்பத்தெல்லாவற்றையும் ஆரானிலே சவதரித்திருந்த (சம்பாதித்த) ஜனங்களையும் கூட்டிக்கொண்டு ஆரானிலிருந்து புறப்படுகிறார் (ஆதி.12:4, 11:31).
அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய் கானான் தேசத்தில் சேர்ந்தார்கள் (ஆதி.12:5
அக்காலத்தில் கானானியர் அத்தேசத்தில் குடியிருந்தார்கள். அந்தத் தேசத்தில் ஆபிரகாம் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்ற சமபூமியில் வந்து தங்கினான் (ஆதி.12:6)
அங்கே வைத்து கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, உன் சந்ததிக்கு இந்த ஸ்தலத்தைக் கொடுப்பேன் என்றார். அங்கே கர்த்தருக்கு முதலாவது பலிபீடத்தைக் கட்டினான் (ஆதி.12:6-7).
பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவில் இருக்கும் மலையில் தன் கூடாரத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான் (ஆதி.12:8).
அதன் பின்பு அவ்விடத்தைவிட்டு, தெற்கே நோக்கி பிரயாணம்பண்ணிக்கொண்டிருந்தான். அந்நாட்களில் தேசத்திலே கொடிய பஞ்சம் உண்டானபடியால் ஆபிரகாம் எகிப்து தேசத்தில் தங்கும்படி போனான் (ஆதி.12:9-10)
இங்கே வைத்து சாராள் ஆபிரகாமின் சகோதரி என்று நினைத்து, அவள் பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டு போகப்பட்டாள். பார்வோனின் பிரபுக்களும் எகிப்து ஜனங்களும் சாராளின் அழகைக் குறித்து புகழ்ந்தார்கள் (ஆதி.12:11-15).
சாராய் நிமித்தம் ஆபிரகாம் ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் சம்பாதித்தான் (ஆதி.12:16).
சாராயை அரமனையில் கொண்டு போனதினிமித்தம் கர்த்தர் பார்வோனையும் அவன் வீட்டாரையும் மகா வாதையால் வாதித்தார் (ஆதி.12:7)
பார்வோன் ஆபிரகாமையும் அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் எகிப்தைவிட்டுப் போகும்படி அனுப்பிவிட்டான் (ஆதி.12:18-20).
ஆபிரகாம் எகிப்தைவிட்டு, பின் தன் மனைவியையும் அவனுக்கு உண்டான யாவும் லோத்தும் தென்திசையில் வந்தார்கள் (ஆதி.13:1)
மிருக ஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாகிய ஆபிரகாம் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவாக மலையில் தான் முன்பு கூடாரமடித்து பலிபீடம் கட்டியிருந்த இடம் மட்டும் வந்து, இங்கே ஆபிரகாம் மறுபடியும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
ஆபிரகாமோடு வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தது (ஆதி.13:5)
இவர்களுடைய (ஆபிரகாம் – லோத்து) ஆஸ்தியின் மிகுதியினால் இவர்கள் ஒருமித்து வாசம்பண்ணக் கூடாமற்போயிற்று (ஆதி.13:6).
இருவருடைய மந்தை மேய்ப்பருக்கும் பெரிய சண்டைகளும் வாக்குவாதங்களும் உண்டாயிற்று (ஆதி.13:7-8)
லோத்து ஆபிரகாமை விட்டுப் பிரிந்து, யோர்தான் நதிப்பக்கமுள்ள செழிப்பான சோதோம், கொமோரா பட்டணங்களைத் தெரிந்துகொண்டு அங்கே குடியிருந்தான் (ஆதி.13:9-11).
ஆபிரகாம் கானான் தேசத்தில் குடியிருந்தான். லோத்து ஆபிரகாமை விட்டுப் பிரிந்த பின்பு கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி அவனிடம் இந்த தேசத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன். நீ தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ அம்மட்டும் நடந்து திரி. உனக்கு அதைத் தருவேன் என்றார் (ஆதி.13:14-17).
பின்பு ஆபிரகாம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டு போய் எபிரோனில் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு மூன்றாவது பலிபீடத்தைக் கட்டினான் (ஆதி.13:18).
சில காலங்களுக்குப்பின் யுத்தத்தில் சிறையாகப் பிடிக்கப்பட்டுப்போன லோத்தையும் அவனது பொருட்களையும் ஸ்திரீகளையும் வேலைக்காரரையும் ஆபிரகாம் யுத்தம் செய்து மீட்கிறார் (ஆதி.14:1-16).
ஆபிரகாமுக்குத் தன் வீட்டில் பிறந்த யுத்தத்துக்குக் கைபடிந்தவர்களாகிய 318 ஆட்கள் இருந்தார்கள் (ஆதி.14:14).
ஆபிரகாம் அந்த நான்கு இராஜாக்களையும் முறியடித்து லோத்தையும் சோதோமின் பொருட்களையும் திருப்பிக்கொண்டு வரும்போது சோதோமின் இராஜா சாவே பள்ளத்தாக்கு மட்டும் அவனுக்கு எதிர்கொண்டு போனான் (ஆதி.14:9,17).
உன்னதமான தேவனுடைய ஆசாரியனாகியருந்த சாலேமின் இராஜாவாகிய மெல்கிசேதேக்கு ஜாதிகளின் இராஜாக்களை ஜெயித்து வரும் ஆபிரகாமுக்கு எதிர்கொண்டு, அப்பமும் திராட்சைரசமும் கொடுத்து அவனை ஆசீர்வதித்தான் (ஆதி.14:18-19).
மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் (ஆதி.14:20, எபி.7:14).
சோதோமின் இராஜாவுக்கும் ஆபிரகாமுக்கும் நடந்த சம்பாசணை: ஆபிரகாம் சோதோமின் பொருள்களில் யாதொன்றையும் எடுத்துக்கொள்ளவில்லை (ஆதி.14:21-24).
கர்த்தர் ஆபிரகாமோடு தரிசனத்தில் பேசுகிறார். நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும் மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார் (ஆதி.15:1).
ஆபிரகாம் தனக்குப் பிள்ளைப் பாக்கியம் வேண்டுமென்று கர்த்தரிடம் கேட்கிறான் (ஆதி.15:2-4).
ஆபிரகாமைக் கர்த்தர் கூடாரத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார். வானத்தை அண்ணாந்து பார். நட்சத்திரங்களை எண்ணக்கூடுமானால் எண்ணு. உன் சந்ததி இவ்வண்ணமாயிருக்கும் என்றார் (ஆதி.15:3-5).
ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான். அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ஆதி.15:6, ரோ.4:3,22, கலா.3:6, யாக்.2:23).
எலியேசர் ஆபிரகாமின் உண்மையுள்ள வீட்டு விசாரணைக் கர்த்தனாயிருந்தான் (ஆதி.15:2 14:1-2).
ஆபிரகாம் மூன்று வயது ஆட்டுக்கடாக்களையும் காட்டுப்புறாவையும் புறாக்குஞ்சையும் கர்த்தருக்கு முன் அவைகளைத் துண்டித்து வைத்தான். பறவைகள் அந்த உடல்கள்மேல் வந்திறங்கினபோது ஆபிரகாம் அவைகளைத் துரத்தினான் (ஆதி.15:7-11).
ஆபிரகாமுக்கு அயர்ந்த நித்திரை. திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது (ஆதி.15:12).
ஆபிரகாமின் சந்ததி எகிப்தில் 400 வருஷம் பரதேசிகளாயிருந்து அத்தேசத்தாரைச் சேவிப்பார்களென்றும் அவர்களுடைய உபத்திரவத்திற்குப் பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள் என்றும் கர்த்தர் அவனிடம் முன்னறிவித்தார் (ஆதி.15:13-16).
அந்நாளில் கர்த்தர் ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணினது: 10 ஜாதிகள் குடியிருக்கிற அந்த தேசத்தை உன் சந்ததிக்கு கொடுத்தேன் என்றார் (ஆதி.15:17-21).
இவ்வளவு காலமும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகள் பிறக்காதபடியினால் எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் அடிமைப் பெண்ணை மறுமனையாட்டியாக சாராய் ஆபிரகாமுக்குக் கொடுக்கிறாள். ஆபிரகாம் மூலம் ஆகார் கர்ப்பவதியானாள். இது கானான் தேசத்தில் அவர்கள் குடியிருந்த பத்தாவது வருஷமாயிருந்தது (ஆதி.16:1-4).
கர்ப்பவதியான ஆகார் சாராளை அற்பமாக எண்ணினாள். அதினிமித்தம் சாராள் அவளைக் கடினமாய் நடத்தினபடியால், அவள் சாராளைவிட்டு வனாந்தர மார்க்கமாய் ஓடுகிறாள். கர்த்தருடைய தூதனாவருடைய சந்திப்புக்குப் பின் திரும்பி வந்து சாராளுக்கு அடங்கியிருந்தாள் (ஆதி.16:1-14).
ஆகார் இஸ்மவேலைப் பெற்றாள். ஆகார் ஆபிரகாமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிரகாம் 86 வயதாயிருந்தான் (ஆதி.16:15-16).
ஆபிரகாமுக்கு 99 வயதானபோது மறுபடியும் கர்த்தர் அவனோடு உடன்படிக்கை செய்கிறார். ஆபிராம் என்ற பெயரை மாற்றி ஆபிரகாம் என அழைக்கிறார் (ஆதி.17:1-6).
ஆபிரகாமோடு கர்த்தர் செய்த விருத்தசேதன உடன்படிக்கை (ஆதி.17:11-12).
சாராய் என்ற பெயரை மாற்றி சாராள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அப்போது ஈசாக்கு வாக்குத்தத்தம் செய்யப்படுகிறான் (ஆதி.17:15,22).
ஆபிரகாமும் அவன் வீட்டிலுள்ள ஆண்மக்கள் யாவரும் ஒரே நாளில் விருத்தசேதனம்பண்ணுகிறார்கள். ஆபிரகாம் விருத்தசேதனம்பண்ணும்போது 99 வயது இஸ்மவேலுக்கு அப்பொழுது 13 வயது (ஆதி.17:23-27).
ஆபிரகாம் மூன்று புருஷருக்கு விருந்துசெய்தான் (ஆதி.18:1-8).
ஆபிரகாமின் விருந்து உபசரணை:
(1) கூடாரத்திலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டோடினான்.
(2) தரைமட்டும் குனிந்தான்.
(3) தன்னை விட்டுப் போகக்கூடாது என்று வருந்திக் கேட்டான்.
(4) தண்ணீரினால் அவர்கள் கால்களைக் கழுவினான்.
(5) மூன்றுபடி மெல்லிய மா எடுத்து அப்பம் சுட்டான்.
(6) நல்ல இளம் கன்றைப் பிடித்து சமைப்பித்தான்.
(7) விருந்தினருக்கு வெண்ணெயையும் பாலும் சமைப்பித்த கன்றையும் கொடுத்தான்.
ஆபிரகாமுக்கு சாராள் மூலம் ஒரு குமாரன் பிறப்பான் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை இம்மூலரும் நிச்சயப்படுத்துகிறார்கள் (ஆதி.18:8-16).
சோதோம் கோமோரா பட்டணங்களுக்காக ஆபிரகாம் கர்த்தரிடத்தில் பரிந்து பேசுகிறான் (ஆதி.18:17-33).
சோதோம் கொமோரா அக்கினிக்கிரையாகிறது. லோத்தின் மனைவி சமபூமியில் பின்னிட்டுப்பார்த்து உப்புத்தூண் ஆனாள். லோத்தும் குமாரத்திகளும் சோவாரிலே ஓடி இரட்சிக்கப்பட்டார்கள் (ஆதி.19:15-30).
ஆபிரகாம் காதேசுக்கும் சூருக்கும் நடுவிலுள்ள கேராரிலே குடியேறித் தங்கினான் (ஆதி.20:1).
கேராரின் இராஜாவாகிய அபிமேலேக்குச் சாராளை அழைப்பித்தல். அங்கே வைத்து தன் மனைவியாகிய சாராளை ஆபிரகாம் தன் சகோதரி என்று அழைத்தான் (ஆதி.20:6-7)
கர்த்தர் ஆபிரகாமைக் குறித்து: அவன் ஒரு தீர்க்கதரிசி என்று அபிமெலேக்கிடம் சொன்னார் (ஆதி.20:7).
அபிமெலேக்கு ஆடுமாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலகை;காரிகளையும் ஆயிரம் வெள்ளிக்காசையும் ஆபிரகாமுக்குக் கொடுத்தான் (ஆதி.20:14-16).
ஆபிரகாம் அபிமெலேக்குக்காக ஜெபித்தான். தேவன் அவன் மனைவியும் வேலைக்காரிகளும் பிள்ளை பெறும்படி அநுக்கிரகம் பண்ணினார் (ஆதி.20:17-18)
ஆபிரகாமின் 100 வது வயதில் ஈசாக்கு பிறந்தான் (ஆதி.21:1-5)
ஆபிரகாம் ஈசாக்குக்கு அவன் பிறந்த 8ம் நாளில் விருத்தசேதனம்பண்ணினான் (ஆதி.21:4)
ஈசாக்கு வளர்ந்து பால் மறந்த நாளில் ஆபிரகாம் விருந்துபண்ணினான் (ஆதி.21:8).
கர்த்தருடைய கட்டளையின்படி ஆபிரகாம் தன் அடிமைப்பெண் ஆகாரையும் தன் குமாரன் இஸ்மவேலையும் வீட்டுக்கு வெளியே அனுப்பிவிட்டான் (ஆதி.21:9-21).
அபிமெலேக்குடைய வேலைக்காரார் கைவசப்படுத்திக் கொண்ட துரவினிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான் (ஆதி.21:25)
அபிமெலேக்கும் ஆபிரகாமும் ஆணையிட்டு உடன்படிக்கை பண்ணினார்கள். அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது (ஆதி.21:22-32).
ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி அங்கே கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான் (ஆதி.21:34).
கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தார். கர்த்தருடைய கட்டளைப்படி தன் நேசகுமாரன் ஈசாக்கை மோரியா மலையில் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஆனால் கர்த்தர் பலிபீடத்திலிருந்து அற்புதமாய் இரட்சித்தார். அவனுக்குப் பதிலாக அங்கே புதரிலே சிக்கிக்கொண்டிருந்த ஓர் ஆடு பலியிடப்பட்டது. அந்த இடத்துக்கு ஆபிரகாம் யேகோவாயீரே என்று பேரிட்டான் (ஆதி.22:1-18, எபி.11:17-19).
கர்த்தருடைய கட்டளையை நிறைவேற்ற ஆபிரகாம் அதிகாலையில் எழுந்தான் (ஆதி.22:3, 21:14).
நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று கர்த்தர் ஆபிரகாமைக் குறித்து சாட்சிகொடுத்தார். அதனால் ஆபிரகாம் விசுவாசிகளுக்குத் தகப்பன் என்ற பெயர் பெற்றான் (ஆதி.22:12, ரோ.4:16-22).
ஆபிரகாம் இப்பொழுது பெயர்செபாவில் குடியிருக்கிறான். கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தை மறுபடியும் ஆபிரகாமுக்கு உறுதிப்படுத்துகிறார் (ஆதி.22:17-19).
சாராளின் மரணம் வயது 127. ஆபிரகாம் மக்பேலா குகையை ஏத்தின் புத்திரரிடத்தில் 400 சேக்கல் நிறை வெள்ளிக்கு வாங்கி அதிலே தன் மனைவி சாராளை அடக்கம்பண்ணினான் (ஆதி.23:1-20).
அதன் பின்பு நேசகுமாரன் ஈசாக்குக்கு ஏற்ற ஒரு மணவாட்டியைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வர ஆபிரகாம் எலியேசரை நியமிக்கிறான். எலியேசரும் ஆபிரகாம் இந்தக் காரியமாக உடன்படிக்கை பண்ணினார்கள் (ஆதி.24:1-67).
எலியேசர் மகா ரூபவதியான ரெபெக்காளைக் கண்டு பிடித்து ஆயத்தப்படுத்தி அழைத்து வந்தான். ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது 40 வயதாயிருந்தான் (ஆதி.25:20).
ஆபிரகாம் கேத்தூராள் என்ற ஒரு ஸ்திரியையும் விவாகம்பண்ணியிருந்தான். அவள் அவனுக்கு சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக் என்ற ஆறு குமாரரைப் பெற்றாள் (ஆதி.25:1-4)
ஆபிரகாம் தனக்குண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான் (ஆதி.25:5).
ஆபிரகாம் மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்குத்தான் உயிரோடிருந்தபோது நன்கொடைகளைக் கொடுத்து ஈசாக்கை விட்டு, கிழக்கே போக கீழ்த்தேசத்துக்கு அனுப்பிவிட்டான் (ஆதி.25:6).
ஆபிரகாம் தன் 175 வது வயதில் மரித்தான். ஈசாக்கும் இஸ்மவேலும் மக்பேலா குகையில் அவனை அடக்கம்பண்ணினார்கள் (ஆதி.25:7-9).
விசுவாசத்தினாலே ஆபிரகாம் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தில் பரதேசியைப்போல சஞ்சிரித்து அந்த வாக்குத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களில் குடியிருந்தான் (எபி.11:9-10).
தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான் (எபி.11:10).
ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான். கண்டு களிகூர்ந்தான் என்று இயேசுவானவர் சொன்னார் (யோ.8:56-58).
ஆபிரகாம் விசுவாசத்தில் பலவீனமாயிருக்கவில்லை. தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசியாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான் (ரோ.4:19-25).
ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதனாயிருந்தான் (யாக்.2:23, 2.நாளா.20:7, ஏசா.41:8).
ஆபிரகாம் மரித்தபின் பரதீசுக்குச் சென்றான். அதற்கு ஆபிரகாமின் மடி என்று பெயர். ஐசுவரியவானின் வாசற்படியில் பருக்கள் நிறைந்தவனாய் பசியுடையவனாய் தரித்திரனாய் வாழ்ந்து வந்த லாசரு மரித்தபின் ஆபிரகாமின் மடியில் தேவதூதர்களால் கொண்டுபோய் விடப்பட்டான் (லூக்.16:22-23).














