அழகான தோட்டங்கள் நிறைந்த மகிழ்ச்சி மலைக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். பழ மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டார்கள். மர நிழலில் அமர்ந்து களைப்பாறினார்கள்.
மலையுச்சியில் அறிவு, ஞானம், கவனம், தங்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்கள். பயணிகளைக் கண்டவுடன் அவர்களை அன்போடு வரவேற்றார்கள். உணவளித்து உபசரித்தர்கள். கிறிஸ்தியானும், நம்பிக்கையும் தங்கள் அனுபவங்களை அவர்களுக்கு விவரமாகக் கூறினார்கள். அவற்றை ஆவலோடு கேட்ட மேய்ப்பர்கள் இரவு தங்கிப் போகும்படி வேண்டிக் கொண்டார்கள். அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில் இரவைக் கழித்தார்கள்.
மறுநாள் காலையில் எச்சரிக்கை என்ற பெயரையுடைய குன்றுக்கு அழைத்தச் சென்றார்கள். அங்கிருந்து பார்த்தபோது சற்றுத் தொலைவில் கண்பார்வையற்ற சிலர் கல்லறைகளுக்கு நடுவே தட்டுத் தடுமாறியவாறு சுற்றிவருவது தெரிந்தது!
யார் இவர்கள்? என்று கேட்டான் கிறிஸ்தியான்.
இந்த மலைக்கு வரும் வழியில் கற்பாதைக்கு அருகில் புல்வெளிப் பாதை இருந்ததல்லவா? அந்தப் பாதையில் சென்று, சந்தேகக் கோட்டை என்ற கோட்டையின் அரக்கனுடைய கையில் பிடிபட்டவர்கள் தாம் இவர்கள். அவன் இவர்கள் கண்களைக் குருடாக்கி இப்படி அலையவிட்டுவிட்டான் என்றார்கள் மேய்ப்பர்கள்.
திடுக்கிட்ட கிறிஸ்தியானும், நம்பிக்கையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் கண்கள் கலங்கின! தங்களைக் காப்பாற்றிய ஆண்டவரை எண்ணித் துதித்தார்கள்.
மேய்ப்பர்கள் பயணிகள் இருவரையும் மலையின் அடியிலிருந்து ஒரு கதவண்டை அழைத்துச் சென்றார்கள். கதவைத் திறந்த உள்ளே பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள். உள்ளே மிக ஆழமான பள்ளம் காணப்பட்டது. கருமை நிறப் புகை வெளிக்கிளம்பியது! நெருப்பு எரிகிற இரைச்சலும் கேட்டது! வேதனையில் புலம்புகிறவர்களின் கூக்குரல் எழுந்தது! இது எந்த இடம்? என்று கேட்டான் கிறிஸ்தியான். இது நரகத்திற்குப் போகும் ஒரு குறுக்கு வழி, பாசாங்கு செய்பவர்களின் வாசல் என்று இதற்குப் பெயர் என்று விளக்கினார்கள் மேய்ப்பர்கள்.
பிறகு பயணிகளை தெளிவு என்ற மலைமுகட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு தொலைநோக்கியை அவர்கள் கையில் கொடுத்து, இதோ இதன்மூலம் பார்த்தால் மோட்சத்தின் வாசல் தெரியும் என்று கூறினார்கள். ஆனால் பதட்டத்தின் காரணமாகப் பயணிகளின் கை ஆடியது! அதனால் அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை!
பயணிகள் மேய்ப்பர்களிடமிருந்து விடைபெறும் வேளை வந்தது. மேய்ப்பர்களில் ஒருவன் அவர்கள் இனிச் செல்லவேண்டிய பாதையின் வரைபடம் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்தான். மற்றறொருவன் முகத்துதி என்பவனைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஆலோசனை கூறினான், மூன்றமவன் மயக்க நிலத்தில் படுத்து உறங்கிவிடாதீர்கள் என்று எச்சரித்தான். நாலாமவன் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக! என்று கூறி வழியனுப்பி வைத்தான்.










