அத்தியாயம்–6
நாம் பாவத்தினாலே நிலைநிற்கக்கூடாது
1 ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே. 2 பாவத்துக்கு இறந்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? 3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா? 4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவன் உள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம். 5 ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். 6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியம் செய்யாமல், பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 7 இறந்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. 8 எனவே, கிறிஸ்துவோடு நாம் இறந்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 9 இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை. 10 அவர் இறந்தது, பாவத்திற்கென்று ஒரே முறை இறந்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு இறந்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
பாவம் ஆளுகை செய்யாமல் இருப்பதாக
12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மரணத்திற்குரிய உங்கள் சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும். 13 நீங்கள் உங்கள் சரீர உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை இறந்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறதினால், பாவம் உங்களை மேற்கொள்ளமுடியாது. 15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதினால், பாவம் செய்யலாமா? செய்யக்கூடாதே. 16 மரணத்துக்குரிய பாவத்துக்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா? 17 முன்பே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். 18 பாவத்தில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகள் ஆனீர்கள். 19 உங்கள் சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்கள் சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள். 20 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்த காலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள்.
பாவத்தின் சம்பளம் மரணம்
21 இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. 22 இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். 23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.