அத்தியாயம்–7
நியாயப்பிரமாணத்தின் முடிவு
1 நியாயப்பிரமாணத்தை தெரிந்திருக்கிறவர்களோடு பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனிதன் உயிரோடிருக்கும்வரைக்கும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? 2 அது எப்படியென்றால், கணவனையுடைய பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; கணவன் இறந்தப் பின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்தில் இருந்து விடுதலையாகி இருக்கிறாள். 3 ஆகையால், கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள்; ஆனால், கணவன் இறந்தப் பின்பு அவள் அந்தப் பிரமாணத்தில் இருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை. 4 அதுபோல, என் சகோதரரே, நீங்கள் இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று பலன் கொடுப்பதற்காக கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு இறந்தவர்களானீர்கள். 5 நாம் சரீரத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்குரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாக நம்முடைய சரீர உறுப்புகளிலே பெலன்செய்தது. 6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி அல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் இறந்தவர்களாகி, அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். 7 எனவே, என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? இல்லையே, பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனே தவிர மற்றப்படி இல்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே. 8 பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப் பெற்று எல்லாவிதமான இச்சைகளையும் எனக்குள் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாக இருக்குமே. 9 முன்பே நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இருந்தபோது நான் ஜீவனுள்ளவனாக இருந்தேன்; நியாயப்பிரமாணம் வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் இறந்தவனானேன். 10 இப்படியிருக்க, ஜீவனுக்குரிய நியாயப்பிரமாணமே எனக்கு மரணத்துக்குரியதாக இருப்பதைப் பார்த்தேன். 11 பாவமானது நியாயப்பிரமாணத்தினாலே வாய்ப்பைப்பெற்று, என்னை ஏமாற்றியது, அதினாலே என்னைக் கொன்றது.
நியாயப்பிரமாணம், பரிசுத்தம், நீதி எனப்படும்
12 எனவே, நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது, நியாயப்பிரமாணம் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது. 13 இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமானதோ? அப்படி இல்லை; பாவமே எனக்கு மரணமானது; பாவம் நியாயப்பிரமாணத்தினாலே அதிக பாவமுள்ளதாவதற்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே இருக்கும்படிக்கும் அப்படியானது. 14 மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, சரீரத்துக்குரியவனாக இருக்கிறேன். 15 எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். 16 இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க, நியாயப்பிரமாணம் நல்லது என்று ஒத்துக்கொள்ளுகிறேனே. 17 எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 18 அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை. 19 எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். 20 அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 21 ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன். 22 உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன். 23 ஆனாலும் என் மனதின் பிரமாணத்துக்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன்; அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. 24 நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்? 25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்துக்கும் ஊழியம் செய்கிறேன்.