6
1 உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநியாயக் காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? 2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயம் தீர்க்கப் படுவதாயிருக்க, சாதாரண வழக்குகளைத் தீர்க்க நீங்கள் தகுதியற்றவரா? 3 தேவ தூதர்களையும் நியாயம் தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த வாழ்கைக் கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக் கொள்ள முடியாதிருக்கிறது எப்படி? 4 இந்த வாழ்க்கைக் கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச் செய்கிறதற்கு, சபையில் சாதாரணமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக் கொள்ளுங்கள். 5 உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க பகுத்தறிவு உள்ளவன் ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா? 6 சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான். 7 நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளுகிறதில்லை? 8 நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப் படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. 9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று அறியீர்களா? ஏமாற்றப் படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரக ஆராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10 திருடனும், பொருளாசைக் காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. 11 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாய் இருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் பெயரினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான் ஆக்கப்பட்டீர்கள். 12 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப் படமாட்டேன். 13 வயிற்றுக்கு உணவும், உணவுக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியச் செய்வார். சரீரமோ வேசித்தனத்திற்கு அல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர். 14 தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். 15 உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்கள் ஆக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. 16 வேசியோடு இணைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாய் இருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாய் இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே. 17 அப்படியே கர்த்தரோடு இணைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். 18 வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனிதன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்கு வெளியே இருக்கும்; வேசித்தனம் செய்கிறவனோ தன் சொந்த சரீரத்திற்கு விரோதமாய் பாவஞ்செய்கிறான். 19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாய் இருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்றும் அறியீர்களா? 20 விலைக்கு வாங்கப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.