- சேவைக்குத் தேவையான சக்தி
தியான வாசிப்பு: யோசுவா 24:1-25
கர்த்தருடைய தாசனாகிய யோசுவாவுக்கு இப்பொழுது வயது நூற்றுப் பத்து. தனது வாழ்க்கை முழுவதையும் கர்த்தருக்குக் காணிக்கையாகப் படைத்து, அவர் ஒருவரையே உத்தமமாய்ச் சேவித்த இக் கர்த்தருடைய ஊழியக்காரன் தான் நேசித்த கர்த்தருடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கும் நாள் கிட்டியது. தான் மரிக்குமுன் இஸ்ரவேலருக்கு இறுதி அறிவுரையாற்ற ஆசித்தான்.
ஆகவே, யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான். அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.
கர்த்தரைச் சேவியுங்கள்
நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம். நானோ என் வாழ்நாளெல்லாம் கர்த்தரையே முழு இருதயத்தோடும் சேவித்து வந்தேன். என் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் நான் கர்த்தரை என் இருதயபூர்வமாக சேவிக்கவேண்டும் என்பதே. அவ்வாறே இதுகாறும் என் வாழ்வில் கர்த்தரையன்றி வேறொருவரையும் நான் சேவிக்கவில்லை. நான் கர்த்தரைச் சேவிக்கவே பிறந்தேன். கர்த்தரைச் சேவித்து வாழ்ந்தேன். கர்த்தரைச் சேவிப்பதில் பேரின்பம் கண்டேன். இப்பொழுதும் நான் உலகுக்கு விடுக்கும் இறுதிச் செய்தி யாதெனில், மக்களே கர்த்தரையே சேவியங்கள். தெய்வச் சேவைக்குத் தேவையான சக்தியையும் தெய்வமே கிருபையாகக் கொடுக்கிறார். நாமெல்லாரும் மனிதராகப் பிறந்ததே கர்த்தரை நம் முழுமனதோடு சேவிப்பதற்காகவே, அவனோ வாழ்க்கையில் அதிக வெற்றி கண்டவன் ஆவான். கர்த்தருக்கு உண்மையாய்ச் சேவை செய்யும் மனிதனே உலகத்துக்குத் தேவை.
கர்த்தருக்கு மனிதர் சேவையாற்றினால், மங்கா வாழ்வு கிடைப்பது மனிதருக்கே. மனிதன் உண்மையில் நல்லவாழ்வு வாழவேண்டுமெனில், அவன் உலகத்தையும், மாம்சத்தையும், பிசாசையும் சேவிக்காது, கர்த்தரையே சேவிக்கவேண்டும். கர்த்தரைச் சேவிப்பவனே நீடித்த பேரின்ப வாழ்வு பெறுவான். கிறிஸ்துவைச் சேவிப்பதே ஒரு கிறிஸ்தவனின் வெற்றி வாழ்க்கையின் இரகசியமாகும்.
கிறிஸ்துவைச் சேவிக்காதவன் தன்னையும் கெடுத்துக்கொள்கிறான். தன் வாழ்வையும் கெடுத்துக்கொள்கிறான். தான் வாழும் உலகத்தையும் கெடுத்துக்கொள்கிறான். ஆதலால் அவனுக்குத் தாழ்வும், அழிவும் வருகின்றன. இதனை நன்குணர்ந்த யோசுவா, இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்காது, அன்னிய தேவர்களைச் சேவித்தால், நீங்கள் அழிவது திண்ணம். இதுகாறும் உங்களைக் காப்பாற்றி இரட்சித்தவர் கர்த்தர் ஒருவரே. அவரை விட்டுவிட்டு வேறே தேவர்களை நீங்கள் பணிந்து கொண்டால் கர்த்தர் உங்களை நிர்மூலமாக்குவார்.
கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும், பலத்தவைகளுமான சாதிகளைத் துரத்தியிருக்கிறார். இ;நாள் மட்டும் கர்த்தருடைய சகாயத்தால் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறவர். எகிப்தின் அடிமைத்தனத்தினின்று உங்களை மீட்டவர் அவரே. சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்தவர் அவரே. உங்களை அற்புதமாக வனாந்தரத்தில் வழி நடத்தி வந்தவர் அவரே. பகலிலே மேகஸ்தம்பத்தினாலும், இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும் உங்களை அதிசயமாய் வழி நடத்தினவர் அவரே. வனாந்தரத்தில் மன்னாவால் உங்களைப் போஷித்தவர் அவரே. உங்கள் தேவையெல்லாம் பூர்த்திசெய்தவர் அவரே. யோர்தானை வெட்டாந்தரையாக்கி உங்களை அற்புதமாய் அதைக் கடக்கச் செய்தவர் அவரே. எரிகோவினர், எமோரியர், பெரிசியர், கானானியர், ஏத்தியர், கிர்காசியர், எவியர், எபூசியர், போன்ற பகைவரையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்தியவர் கர்த்தரே. மேலும் நீங்கள் கட்டாத பட்டணத்தையும், நாட்டாத திராட்சைத் தோட்டத்தையும், வெட்டாத கிணற்றையும், ஈட்டாத திரவியத்தையும் யார் தயவால் பெற்றுள்ளீர்கள்? கர்த்தருடைய தயவினால்தானே. பாலும் தேனும் ஓடுகிற இக்கானான் தேசத்தை உங்கள் சுதந்திரமாகக் கொடுத்தவர் யார்? கர்த்தர்தாமே. மேலும் எஞ்சியிருக்கிற பகைவர்களையும் துரத்தி ஒழிக்கக்கூடியவர் கர்த்தர் ஒருவரே. இக்கானான் சுதந்திரத்தை நிலைவரமாக அவர்களுக்கு ஆசீர்வதித்துத் தரக்கூடியவரும் கர்த்தர் ஒருவரே. கர்த்தர் சகாயத்தால் மட்டுமே அவர்கள் கானானில் நீடுழி பேரின்பம் துய்த்து, சுபீட்சமாக வாழமுடியும். அவர்கள் இன்ப வெற்றி வாழ்க்கையின் உயிர்நாடி கர்த்தரே.
ஆனால், இவ்வாறு தங்கள் உயிருக்கு உயிரான, சுதந்திரத்திற்கு காரணரான பேரின்பத்திற்குக் கர்த்தாவான, வெற்றிக்கு இரகசியமான கர்த்தரை மறந்துவிட்டு, பின் வாங்கிப்போய் வேறே தேவர்களை நினைத்து, அவைகளைப் பணிந்துகொண்டு சேவித்தால், கர்த்தர் அவர்களோடுகூட இருக்கமாட்டார். அவர்கள் அழிவது நிச்சயம். அவர்கள் மீதியாயிருக்கிற கானானிய பூர்வீகக் குடிகளோடு சேர்ந்து, அவர்களோடு சம்பந்தங் கலந்து, அவர்களோடு அந்நியோந்நியமாய் உறவாடினால், கர்த்தர் இனி இந்த எஞ்சியிருக்கிற சாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார். கர்த்தரை மறந்த நீங்கள், கர்த்தர் உங்களுக்குக் கிருபையாகக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும் , உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்று நிச்சயமாய் அறியக்கடவீர்கள்.
கர்த்தர் பேரில் யாதொரு குற்றமும் இல்லை. அவர் குற்றம் செய்ய மனிதனும் அல்ல. அவர் உங்களுக்குச் சொன்ன ஒரு வார்த்தையும் தவறிப்போகப்பண்ணவில்லை. அவர் உங்களை நேசித்தார். உங்களை இரட்சித்தார். உங்களைப் போஷித்தார். உங்களைக் காப்பாற்றினார். உங்களை வழிநடத்தினார். உங்களுக்காகப் போர் செய்தார். அற்புதங்களை நடத்தினார். கானான் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தாhர். தம் வாக்கை நிறைவேற்றினார். இன்றும் உங்களோடிருந்து உங்களை ஆண்டு நடத்துகிறார். இப்படிப்பட்ட நல்ல தெய்வத்தை மறந்து, சோராம்போய், அன்னிய தேவர்களைப் பின்பற்றினால், கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றி எரியும். அவர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து, நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள்.
நீங்கள் அழிந்து போகாவண்ணம் கர்த்தரையே சேவியுங்கள். கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடவுங்கள். கர்த்தரையே பின்பற்றுங்கள். கர்த்தரில் அன்புகூருங்கள்.
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற கானான் தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தர் ஒருவரையே சேவிப்போம் என்றான்.
அப்பொழுது ஜனங்கள், பிரதியுத்தரமாக, வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரைவிட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக. நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழிகளிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே. தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே. ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம். அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.
யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள். அவர் பரிசுத்தமுள்ள தேவன். அவர் எரிச்சலுள்ள தேவன். கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான்.
ஜனங்கள் யோசுவாவை நோக்கி; அப்படியல்ல. நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள்.
அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி, கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்து கொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள், ஆம், நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்பதற்கு நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி, நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள். அந்தப்படியே யோசுவா அந்நாளிலே சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கை பண்ணி, அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான். ஆம், இஸ்ரவேலின் நியாயப்பிரமாணத்தின் சாரம்சம் இதுதான். அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் தங்கள் முழு இருதயத்தோடும் அன்புகூர்ந்து, அவர் ஒருவரையே பணிந்துகொண்டு, அவர் ஒருவரையே சேவிக்கவேண்டும். இப்பிரதானமான நியாயப்பிரமாணத்தை யோசுவா இஸ்ரவேலின் மனதில் பசுமரத்தாணிபோல் பதிய வைத்துவிட்டான். இனி அவன் வாழ்வின் வேலை முடிந்துவிட்டது. இனி அவன் சமாதானத்துடன் மரித்துப்போகலாம். இஸ்ரவேலர் கர்த்தரையே சேவிக்கவேண்டும் என்ற சத்தியத்தை அழுத்தம் திருத்தமாக அறைகூவிய பின்னர், நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய உத்தம ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தூன். அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்தில் அவனுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள்.
கர்த்தரையே சேவியுங்கள். கர்த்தரையே சேவியுங்கள் என்று யோசுவா புத்தகம் இறுதி அதிகாரம் உலகத்தாரைக் கூவியழைத்துப் பறைசாற்றுகிறது. பக்தி பொங்கி, இயேசு பகவானுக்குப் பணிபுரியுங்கள் என்பதே திருமறை நமக்குக் கொடுக்கும் முக்கியச் செய்தியாகும். கிறிஸ்துவுக்கு தொண்டாற்றுவதற்கே நாம் ஈண்டு மீட்கப்பட்டுள்ளோம் என்ற உண்மைதனை மீண்டும் மீண்டும் நினைப்பூட்டுகிறது யோசுவாவின் தியாகத் தொண்டு வாழ்க்கை.
பழைய ஏற்பாட்டு யோசுவாவின் புத்தகத்திற்குப் புதிய ஏற்பாட்டு விளக்கம் தந்து நிற்பது எபேசியர் நிருபம். இச்சந்தர்ப்பத்தில் இரண்டாம் அதிகாரத்தை ஆராய்வோம். முதலாவது நமக்கு வெளியாக்கப்பட்டுள்ள மகத்தான வெளிப்படுத்தலை உற்று நோக்குவோவம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், நம்மில் அன்பு கூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். (கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக, கிறிஸ்துவுக்குள் நம்மை அவரோடேகூட உட்காரவும் செய்தார் (எபேசி.2:4-7).
இரண்டாவது நமக்குக் கிடைத்துள்ள அனுபவத்தைப் பார்க்கலாம். கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடுகூட உட்காரவும் செய்தார் (எபேசி.2:4-7).
மூன்றாவது, நாம் கிறிஸ்தவ சேவையாற்றவே கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிகிறோம். ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.(எபேசி.2:10). ஆம், நமக்குத் தெய்வத் தரிசனம் வெளிப்பட்டு, நாம் இரட்சிக்கப்பட்டுள்ளதின் நோக்கமே, நாம் கிறிஸ்தவ சேவையாற்றவேண்டும் என்பதே. இஸ்ரவேலர் எகிப்பதின் அடிமைத்தனத்தினின்று மீட்கப்பட்டு, கானான் சுதந்திரத்தைப் பெற்றனுபவிப்பதன் நோக்கதே, அவர்கள் கர்;ததரைச் சேவிக்கவேண்டும் என்பதே. கிறிஸ்தவ சேவையில்லா இரட்சிப்பின் தேவை யாதோ?
ஆனால் கிறிஸ்தவ சேவை செய்ய வேண்டுமெனின், நமக்கு அத்தியாவசியம் வேண்டிய தேவை, நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்படவேண்டும். கிறிஸ்துவின் ஆவியானவர்தாமே நாம் கிறிஸ்தவத் தொண்டாற்றுவதற்குப் போதிய சக்தி தரவேண்டும். கிறிஸ்துவின் ஆவியானவரையல்லாமல், நம்மால் ஒன்றும் செய்யக்கூடாது. என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலனுண்டு. ஆகவே, கிறிஸ்தவத் தொண்டனுக்கு உயிர்ச் சக்தியளிப்பவர் கிறிஸ்துவின் ஆவியானவரே.
ஒரு கிறிஸ்தவன் எப்பொழுது உத்தமக் கிறிஸ்தவப் பணிபுரிய வேண்டுமாயின், அவன் எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருக்கவேண்டும். ஆவியில் எப்பொழுதும் அனலாயிருந்தால்தான், கர்த்தருக்கு ஊழியஞ்செய்ய முடியும் (ரோ.12:11). நாம் தேவஊழியத்தில் சோர்ந்து போவதின் இரகசியம், அவியில் ஆரம்பம் பண்ணின நாம், மாம்சத்தில் முடிவு பெறுவதே (கலா.3:3). ஆவியில் அனலுமின்றிக் குளிருமின்றி வெதுவெதுப்பாயிருப்பவர்கள் கர்த்தருடைய ஊழியத்திற்குப் பாத்திரர் அல்லர்.
ஒருவனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யக்கூடாது. ஆனால் அநேகக் கிறிஸ்தவர்கள் தற்காலத்தில் இரண்டு எஜமான்களுக்கு வெகு சாமர்த்தியமாய் ஊழியஞ்செய்யப் பார்க்கிறார்கள். முடிவோ படுதோல்விதான். எந்தமட்டும் இருமனதால் குந்திக் குந்தி நடப்பீர்கள்? ஒன்று கிறிஸ்துவைச் சேவியுங்கள். அல்லது சாத்தானைச் சேவியுங்கள். இரண்டு பேரையும் சேவிக்க முயல்கிறவர்கள் எத்துணை புத்தியீனர். கிறிஸ்தவர்களே, இப்பொழுது சற்று நின்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் யாரைச் சேவிக்கிறீர்கள்? கிறிஸ்துவைச் சேவிக்கிறீர்களா? அல்லது உலகத்தையும் சாத்தானையும் மாம்சத்தையும் சேவிக்கிறீர்களா? அல்லது இரண்டையும் சாதுரியமாகச் சேவிக்கப் பாடுபடுகிறீர்களா? இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது என்பதை மறக்கவேண்டாம். கிறிஸ்துவையே சேவிக்க உங்களை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுங்கள்.
நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்.
06.01.2003












